இந்த வெற்றி எனக்கு முக்கியமானது

இந்தப் படமும் வெற்றியும் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துள்ளேன். இந்தப் படத்தின் வெற்றி மூலம் பயமும், பொறுப்பும் கூடியுள்ளது” என நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பார்க்கிங்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. மேடையில் பேசுவதற்கு முன்னதாக நடிகர் ஹரிஷ் கல்யாண், படத்தின் இயக்குநர் ராம்குமாருக்கு தங்கக் காப்பு பரிசளித்தார்.

அப்போது பேசிய ஹரிஷ் கல்யாண், “இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பார்வையாளர்களை தியேட்டரில் நேரில் சந்தித்தோம். இந்தப் படத்தை எல்லோரும் அப்படி கொண்டாடினார்கள். இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இது நிச்சயம் இருக்கும் என பலரும் சொன்னார்கள். நீங்கள் கொடுத்த அன்பால்தான் இங்கு நிற்கிறோம். இந்தப் படமும் வெற்றியும் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

வெற்றி இயக்குநர் பட்டியலில் ராம் நிச்சயம் இருப்பார். இந்த வெற்றி சந்தோஷத்தையும் தாண்டி பயத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளது. மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பு கூடியுள்ளது” என்றார்.

நடிகர் எம்.எஸ். பாஸ்கர், “சில படங்கள் ஆரம்பத்தில் டல்லாக இருக்கும். போகப் போக பிக்கப் ஆகும். அப்படியான படங்கள் காலத்துக்கும் நிற்கும். படத்தில் கார் வாங்கும் சீனுக்காக படப்பிடிப்பில் நான் கோபமாக இருந்ததேன் என இயக்குநர் இங்கே கூறினார். உண்மைதான், அந்த உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அதே உணர்வில் இருந்தேன்.காட்சியை அப்படியே நிஜத்திலும் பின்தொடர வேண்டும் என நினைப்பேன்.
அதேபோல இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்.

சாப்பிடாமல் தொடர்ந்து வேலை செய்ய வேண்டாம். இதை நான் இயக்குநரிடம் கூட சொல்லி செல்லமாக கோபித்திருக்கிறேன். வீட்டுக்குள் இருக்கும் பிரச்சினையை நல்ல விதமாக படமாக்கியுள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தில் எல்லோருடைய ஒத்துழைப்புக்கும் வெற்றிக் கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி”. என்றார்.

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், “ஊடகங்கள் கொடுத்த பாசிடிவ் ரிவியூவால்தான் மக்கள் நிறைய பேரிடம் இந்தப் படம் போய் சேர்ந்தது. வெள்ளம், மழை என நிறைய இடையூறுகள் இருந்தாலும் இந்தப் படத்துக்கு மக்கள் நிறைய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். லாக்டவுன் சமயத்தில் மூன்று கதைகள் சொன்ன போது, இது செய்யலாம் என தயாரிப்பாளர் சொன்னார்.

இப்போது படத்தின் வரவேற்பை பார்த்து அவர் மகிழ்ச்சியில் உள்ளார்.

ஹரிஷ் கல்யாணிடம் கதை சொல்லும் போது ஒரு பதட்டம் இருந்தது. ஆனால், அவரும் இந்தக் கதையில் ஈடுபாடு காட்டி நிறைய சப்போர்ட் செய்தார். எம்.எஸ். பாஸ்கர் லெஜெண்டரி நடிகர். படப்பிடிப்புத் தளத்தில் அந்தக் கதாபாத்திரத்திலேயே இருந்தார். படத்தில் வருவது போலயே மிகவும் கோபமாக இருந்தார்.

படம் முழுவதுமே இந்துஜாவுக்கு கர்ப்பமாக இருப்பது போன்ற சவாலான கதாபாத்திரம். நல்ல படத்தில் நல்ல கதாபாத்திரம் என இந்துஜா ஒத்துக் கொண்டார். பிரார்த்தனா எல்லாமே சிங்கிள் டேக்கில் நடித்து விடுவார். படத்தில் நடித்துள்ள மற்ற கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்குமே நன்றி”என்றார்.

Related posts