பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தியமைக்கப்படும்

சகல தரப்பினரது உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தியமைக்கப்படும். எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாத காலத்துக்குள் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலம் தொடர்பில் உறுதியான தீர்மானம் எடுக்கப்படும். மாவீரர் தினத்தன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக,உணவு பாதுகாப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நீதியமைச்சரிடம், அடக்குமுறையினால் தான் இந்த நாட்டில் போர் மூண்டது.

கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் அரகலய தோற்றம் பெற்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்கள் தமது உறவுகளை நினைவு கூர்வதற்காக ஒன்று கூடுவதை பொலிஸார் பூதாகரமாக மாற்றி விடுகிறார்கள். உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து தமது ஏக்கங்களை வெளிப்படுத்துவதை பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக தடுப்பது நியாயமற்றது.

அமுல்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட மனித உரிமைகள் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

அமைதியான முறையில் ஒன்றுகூடும் அடிப்படை உரிமைகளை தடுத்தால் அது மாறுப்பட்ட முரண்பாடுகளை தோற்றுவிக்கும். வருடத்தில் ஒரு தினத்தன்று தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எமது மக்களுக்கு இடமளியுங்கள் என வலியுறுத்தினார்.

எழுந்து பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி,சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் 2018 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னரான சூழ்நிலைகளால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் முயற்சிகள் கைவிடப்பட்டன.

இவ்வாறான பின்னணியில் 2023.மே மாதம் பயங்கரவாத திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அதனை தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்கள்,வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட சகல தரப்பினருடன் கலந்துரையாடி உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பது பல்வேறு காரணிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதால் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவில்லை.

எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதமளவில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்கப்படும்.

சகல தரப்பினரது உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் வலுவான தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

மீண்டும் எழுந்து உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கால நாதன் மாவீரர் தினத்தன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என்றார்.

இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் மாவீரர் தினத்தன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.

Related posts