‘புஷ்பா 2’-வுக்காக அல்லு அர்ஜுன் சம்பளம்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்த படம் ‘புஷ்பா’. இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தை அதிக பட்ஜெட்டில் உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு அல்லு அர்ஜுன் சம்பளம் பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மொத்த வருமானத்தில் 33 சதவிகிதம் சம்பளமாக வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிக எதிர்பார்ப்பை கொண்டிருக்கும் இந்தப் படம் கண்டிப்பாக ரூ.1000 கோடி வசூலை எட்டும் என்றும் அதனால் அல்லு அர்ஜுனுக்கு ரூ. 330 கோடி சம்பளம் கிடைக்கும் என்று தெலுங்கு சினிமாவில் கூறி வருகின்றனர். இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் ஏதும் தெரிவிக்கவில்லை. இது உண்மை என்றால் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் இருப்பார் என்கிறார்கள்.

Related posts