விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நிலத்தை தோண்டும் நடவடிக்கை கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று (25) மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் இன்றைய தினம் (26) நான்காவது நாளாக அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன.

இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த விடயம் கடந்த 19ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தில் நிலத்தை தோண்டுவதற்கு நீதிமன்றத்தில் அன்றைய தினமே நீதிபதியின் அனுமதி பெறப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் பிரசன்னத்துடன் குறித்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts