225 உறுப்பினர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்

பாராளுமன்றத்தின் மீது மக்களின் நம்பிக்கை இருக்கும் வரையில் தான் பாராளுமன்றத்தின் கௌரவம் பாதுகாக்கப்படும், மக்களின் நம்பிக்கை இல்லாமல் போகும் போது எதிர்மறையான விளைவுகள் தோற்றம் பெறும்.

ஆகவே பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாப்பது 225 உறுப்பினர்களினதும் பொறுப்பாகும். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை நோக்கி இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த குறிப்பிட்ட விடயங்கள் தவறு, அதை அவர் திருத்திக் கொள்ள வேண்டும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற அமர்வின் போது இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரோஹிணி கவிரத்னவை நோக்கி தகாத வார்த்தைகளை பிரயோகித்ததாக குறிப்பிட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் சபையில் அமைதியின்மை நிலவியது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாப்பது சகல உறுப்பினர்களின் பொறுப்பாகும்.பாராளுமன்றம் பயனற்றது என்று நாட்டு மக்கள் வெறுப்பதை நியாயப்படுத்தும் வகையில் தான் பாராளுமன்றத்தில் ஒரு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

ஐக்கிய மக்கள் சக்கியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்ட பதிலில் முதல் வார்த்தையில் எவ்வித முரண்பாடும் கிடையாது.

ஆனால் அவர் தொடர்ந்து இரண்டாவதாக குறிப்பிட்ட வார்த்தை பிரயோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அது தவறு. ஒன்று அவர் தவறை ஏற்றுக் கொண்டு அதனை திருத்திக் கொள்ள வேண்டும்.அல்லது சபைக்கு தலைமை தாங்குபவர் அதனை திருத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளும் மற்றும் எதிர்தரப்புக்கு சார்பாக நான் பேசவில்லை.இராஜாங்க அமைச்சரின் கருத்து தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் எதிர்தரப்பில் இருந்து அவரை நோக்கி பல தகாத வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன.’நாய்,பறை நாய்,முட்டாள்’ என பல வார்த்தைகளை குறிப்பிட்டனர். இவ்வாறான வார்த்தைகளை பாராளுமன்ற சாதாரண சிற்றூழியர் கூட பயன்படுத்துவது தவறானது.

பாராளுமன்றத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகிறது என மக்கள் மத்தியில் நிலைப்பாடு காணப்படுகின்றன நிலையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சபைக்கு தலைமை தாங்குபவர் சபாநாயகரின் அறிவிப்பு கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சபைக்கு தலைமை தாங்குபவருக்கு சபாநாயகரின் அதிகாரம் முழுமையாக உள்ளது.

பாராளுமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கை இருக்கும் வரை தான் பாராளுமன்றம் நிலைத்திருக்கும். ஆகவே பாராளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும் போது எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.

ஆகவே பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

Related posts