வசூல் குறித்து எனக்கு கவலை இல்லை

தன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்து தனக்கு கவலை இல்லை என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பதாவது: “என் படம் வசூலிக்கும் தொகை எனக்கு எந்தவித உற்சாகத்தையும் தருவதில்லை.

அதுகுறித்து நான் கவலைப்படுவதும் இல்லை. என் தயாரிப்பாளர் என் படத்தில் முதலீடு செய்யும் பணம் குறித்து மட்டும்தான் நான் கவலை கொள்வேன்.

அதை எப்படியாவது திருப்பி அளித்துவிட வேண்டும் என்பதில் கண்டிப்பாக அக்கறை எடுத்துக் கொள்வேன்.

அதே போல ரூ.150 கொடுத்து டிக்கெட் வாங்கி திரையரங்குக்குள் வருபவர்களை மகிழ்விப்பதில் அக்கறை எடுத்துக் கொள்வேன்.

அதைத் தாண்டி, படத்தின் லாபத்தில் எனக்கு பங்கு இருக்கிறது என்றால் படத்தின் வசூல் குறித்து நான் கவலைப்படலாம்.

படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்படுவதே எனக்கு உற்சாகம் தரும்.” இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

Related posts