ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ 2 பாகங்களாக ரிலீஸ்

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘தேவரா’ (Devara) திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என படத்தின் இயக்குநர் கொரட்டலா சிவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது அது நாளுக்கு நாள் விரிவடையத் தொடங்கியது. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அழுத்தமாக இருக்கும். அத்துடன் அந்த கதபாத்திரங்கள் ஆழமாகவும், விரிவாகவும் எழுதப்பட்டுள்ளன. எனவே, இதனை ஒரு பாகத்துக்குள் அடைக்க முடியாது என்பதால் இந்த பிரமாண்ட கதையை இரண்டு பாகங்களாக சொல்ல முடிவெடுத்துள்ளோம்.

கதை வடிவம் மாறாது; அதேசமயம் அதன் அளவு விரிவடையும். பிரமாண்ட படமாக ‘தேவரா’ இரண்டு பாகங்களாக வெளியிடப்படும். அதன் முதல் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

தேவரா: ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவாவுடன் இணைகிறார்.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கின. இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமவுலி, க்ளாப்போர்ட் அடித்து படத்தின் பணிகளை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Related posts