இரண்டு சர்வதேச விசாரணைகளை இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் காலத்தை இழுத்தடித்து அரசாங்கம் செயற்படுமாக இருந்தால் இரண்டாவது சர்வதேச விசாரணைக்கும் நாடு முகம்கொடுக்க நேரிடும். விசாரணை ஆணைக்குழு, தெரிவுக்குழு மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையில்லை என எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மலல்கொட ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியன முன்வைத்த பரிந்துரைகள் இதுவரை செயற்படுத்தப்படவில்லை.

பாராளுமன்ற தெரிவுக்குழுவும் இருந்தது. அதுவும் செயற்படவில்லை. இந்த அரசாங்கமும் பொதுஜன பெரமுன அரசாங்கமும் குழுக்களை அமைத்து சர்வதேச ரீதியில் பிரபலமடைந்துள்ளது. ஆனால் தீர்மானம் வந்தாலும் அதனை செயற்படுத்துவதில்லை.

அதேபோன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் அவ்வாறானதே. அந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டாலும் இங்கு ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன்படி காலத்தை இழுத்தடிக்கவே செய்கின்றனர். தற்போதைய ஜனாதிபதி எங்களுடன் இருந்தவர். அவர் காலத்தை இழுத்தடிப்பதில் திறமையானவரே. எவரும் இங்கு அமைக்கப்படும் குழுக்கள் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. இவ்வாறான காலத்தை இழுத்தடிக்கும் விடயங்களுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

ஏற்றுக்கொள்ளக் கூடிய உள்நாட்டு விசாரணையை முன்னெடுக்காவிட்டால் இது சர்வதேசத்திற்கு செல்லும். அப்படியென்றால் இரண்டு சர்வதேச விசாரணைகள் இலங்கை எதிர்கொள்ள நேரிடும்.

ஏற்கனவே இறுதிக்கட்ட யுத்த காலம் தொடர்பில் விசாரணை நடக்கின்றது. அது முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர். ஆனால் அது முடியவில்லை. கடந்த வருடமும் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. அலுவலமும் அமைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னர் நீக்கப்பட்ட மேஜர் ஜெனரல்கள் எங்களுக்கு எதிராக சாட்சியமளிக்கின்றனர். அதனுடன் இப்போதுள்ள விடயமும் போகும். இதன்படி இரண்டு சர்வதேச விசாரணைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும். இப்படி இருந்தால் முதலீட்டாளர்கள் இங்கே வருவார்களா? இதனால் குழுக்களை அமைப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். இது முழு நாட்டையும் பாதிப்புக்குள்ளேயே கொண்டு செல்லும் என்றார்.

Related posts