கனடா விசா வழங்கும் சேவையை இந்தியா நிறுத்தி உள்ளது

கனடாவில் சுர்ரே பகுதியை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார்.

கனடாவின் குடிமகன் அந்தஸ்து பெற்றவரான அவர், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியா மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதனால், இரு நாடுகளும் அந்தந்த நாடுகளின் தூதர்களை வெளியேறும்படி உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், கனடாவின் வின்னிபக் என்ற பகுதியில் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி இன்று சுட்டு கொல்லப்பட்டார்.

சுக்தூல் சிங் என்ற அந்த காலிஸ்தான் பயங்கரவாதி 2 கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார்.

அவர், 2017-ம் ஆண்டு கனடாவுக்கு போலி ஆவணங்கள் மூலம் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

இவர், அர்ஷ்தீப் தல்லா என்பவரின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு வந்துள்ளார்.

கனடா நாட்டுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், விசா வழங்கும் சேவையை இந்தியா நிறுத்தி உள்ளது. இதன்படி, அடுத்த உத்தரவு வரும்வரை இந்த சேவை நிறுத்தப்படுகிறது.

இதுபற்றி மாலை 4 மணிக்கு வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளிக்க உள்ளது.

இந்த விவகாரத்தில் கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி பவன்குமார்ராய் என்பவரை கனடா அரசு நாட்டைவிட்டு வெளியேற்றியது.

இது தொடர்பாக கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டும் இன்றி பதிலடியாக கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

மேலும், கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் கனடா-இந்தியா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனடா தனது நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில்;

குற்றவாளிகளின் புகலிடமாக கனடா உள்ளது என்ற கெட்ட பெயர் ஏற்படாமல் கனடா அரசு செயல்பட வேண்டும். கனடாவிலுள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்நாட்டின் பொறுப்பாகும்.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா மீது குற்றச்சாட்டுகளை கனடா முன்வைக்கிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

——-
மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டினருக்கு விசா வழங்குவது இன்று (செப்.21) முதல் நிறுத்தம் செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக விசா வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனமான பிஎல்எஸ் இன்டர்நேஷனல் தனது இணையதளத்தில், “இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு: செயல்பாட்டுக் காரணங்களுக்காக, செப்.21-ம் தேதி முதல், அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்திய விசா சேவை நிறுத்தப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு பிஎல்எஸ் இணையதளத்தைப் பாருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப் பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் போட்டோக்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர்.
இதனிடையே, காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக இந்தியா மற்றும் கனடா இடையே நடந்து வரும் மோதலைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் வசிக்கும் தனது குடிமக்களுக்கு கனடா அரசு செவ்வாய்க்கிழமை ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவும் கனடா வாழ் இந்தியர்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை நேற்று வழங்கியுள்ளது.
அறிவுறுத்தல் விவரம்: கனடாவில் அதிகரித்து வரும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அரசியல் ரீதியான வெறுப்பு குற்றச்சாட்டு வன்முறைகளை கருத்தில் கொண்டு அங்கு வாழும் இந்திய குடிமக்கள், மாணவர்கள் மிகுந்த கவனமுடன் செயல்படவேண்டும். அங்கு பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களும் முன்னெச்சரிக்கை மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
கனடாவிலிருந்து இந்திய தூதரை வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ள சூழ்நிலையில் அங்கு அத்தியாவசியமில்லாத பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அங்குள்ள பல குழுக்கள் நமக்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளது. கனடாவில் வசிக்கும் இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வை உறுதி செய்வதற்காக கனடா அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் எப்போதும் தொடர்பில் இருக்கும்.
விரும்பத்தகாத நிகழ்வுகளின் சூழ்நிலைகளின்போது ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் அல்லது டொரண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். வலைதளங்கள் மூலமாகவும் கனடாவாழ் இந்தியர்கள் உதவி கோரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts