அமினியின் மரணம் நிகழ்ந்து ஒரு வருடம் !

ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு காரணமாக அமைந்த மஹ்சா அமினியின் தந்தை ஈரான் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மஹ்சா அமினி உயிரிழந்து ஒரு வருடமாகியுள்ள நிலையில் அவரது தந்தை ஈரானிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த வருடம் செப்டம்பர் 13ம் திகதி ஈரானின் ஒழுக்கபொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மஹ்சா அமினி மூன்று நாட்களின் பின்னர் 16 ம் திகதி பொலிஸ்காவலில் உயிரிழந்தார்.

அவரது மரணம் ஈரான் முழுவதும்கடும் ஆர்ப்பாட்டங்களை தூண்டியது.

இந்த சம்பவங்கள் இடம்பெற்று ஒருவருடம் பூர்த்தியாகின்ற நிலையில் மஹ்சா அமினியின் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அமினியின் தந்தை அம்ஜாட் கைதுசெய்யபட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மகளின் மரணத்தின் பின்னர் தந்தையை பொலிஸார் அடிக்கடி விசாரணைக்கு அழைத்தனர் என ஈரான் பத்திரிகையாளர் மஜியார் பஹாரி சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் சிலமணிநேரம் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார் என அவர்குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் மேற்கு குர்திஸ் நகரில் உள்ள அமினியின் கல்லறைக்கு அவரது குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை அவரது குடும்பத்தினர் சென்றிருந்தனர்.அவர் மரணமடைந்து ஒரு வருடத்தை குறிக்கும் விதத்தில் அவர்கள் அங்கு சென்றிருந்தனர்.

அவ்வேளை அந்த மயானத்திற்கு மேல் ஹெலிக்கொப்டர் வட்டமிட்டதாகவும் மயானத்தை சுற்றி பொலிஸார் காணப்பட்டனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மறுநாள் அம்ஜட்டும் அவரது மகனும் சில மணிநேரம் தடுத்துவைக்கப்பட்டு – மயானத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு மக்களை ஊக்குவித்தால் தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் ஈரானின் அதிகாரிகள் இந்த தகவலை மறுத்துள்ளனர்.

முன்னதாக அமினியின் உறவினர் ஒருவர் செவ்வாய்கிழமை கைதுசெய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமினி கொல்லப்பட்டு ஒருவருடத்தை குறிக்கும் விதத்தில் ஈரானில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

Related posts