முழுமையான நட்டஈடு பெறமுடியாமல் இருக்கிறது – சஜித்

நியூ டயமண்ட் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளினால் அரசாங்கம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முழுமையான நட்டஈட்டை பெற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. அத்துடன் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பாக விடுத்துக்கும் அறிக்கையை விமர்சித்து தெரிவித்த கருத்து பதிலளிக்கையிலேயே சஜீத் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையிக்கையில்,

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளுக்கு எந்தவகையிலும் பாதிப்பு ஏற்படும்வகையில் நாங்கள் செயற்படப்போவதில்லை.

ஆனால் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் கடல் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் நியூ டயமண்ட் கப்பலால் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

நியூ டயமண்ட் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதன் மூலம் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பின் மூலம் அரசாங்கம் பாடம் கற்றுக்கொள்ள வில்லை.

அதேபோல் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அழிவு ஏற்படும்போது பிழையான முறையில் அரசாங்கம் செயற்பட்டது.

அதாவது எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் அழிவினால் நீர்கொழும்பு கடற்கரையில் இருந்து பாணந்துரை கடற்கரை வரையான பிரதேசமே பாதிக்கப்பட்டுள்ளதாக பிழையான முறையில் குறித்த நிறுவனங்கள் தீர்மானத்துக்கு வந்திருந்தன.

ஆனால் பல்வேறு குழுக்கூட்டங்களில் இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது,

நீர்கொழும்புக்கு அப்பால் புத்தளம், மன்னார் மாவட்டங்களிலும் களுத்துறை, காலி முதல் அம்பாந்தோட்டை மாவட்ட கடல் வளத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதனால் இந்த விடயத்தில் அரச நிறுவனங்கள் நேர்மையாக செயற்படுகின்றதா என்ற கேள்வி எமக்கு இருக்கிறது.

அதனால் அது தொடர்பில் கேள்வி எழுப்ப பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை இருக்கிறது. என்றாலும் இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

பேர்ள் கப்பலின் அழிவால் நீர்கொழும்பில் இருந்து பாணந்துரை வரையான பகுதியே பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போதும் தெரிவிக்கின்றனர்.

அதனடிப்படையிலேயே இதற்கான நட்டஈடு கணக்கிடப்பட்டிருக்கிறது. இது தவறு. அதனால் எமக்கு எங்கு தவறினோம் என்பதை தேடிப்பார்க்க எமக்கு உரிமை இருக்கிறது என்றார்.

Related posts