தமிழ் எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும்.
சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அழைப்பு விடுத்தார்.
குருந்தூர் மலை விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் இனவாத கொள்கையுடைய பொன்னம்பலம் பரம்பரையின் மூன்றாவது தலைமுறையான பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குருந்தூர் மலைக்கு சென்று அரங்கேற்றிய நாடகத்தை நாங்கள் அனைவரும் பார்த்தோம்.
தமிழ் அடிப்படைவாதிகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிமன்ற அனுமதியை பெற்று அங்கு வருகை தந்ததால் நாங்கள் அவர்களை தடுக்கவில்லை.
நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதப்படும் என்பதால் நாங்கள் அமைதியாக இருந்தோம்.
தொடர்ந்து அமைதியாக இருப்பது அவர்கள் வெற்றிப் பெற்றார்கள் என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்கும்.அவர்கள் மகிழ்ச்சியடையும்.
குருந்தூர் மலை குறித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்மானம் எந்தளவுக்கு நியாயமானது என்பது தர்க்கத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை குருந்தூர் விகாரையின் விகாராதிபதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தியுள்ளார்.
குருந்தூர் விகாரை 2200 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
குருந்தூர் மலையை சூழ்ந்த பகுதிகளில் புராதன தொல்பொருள்கள் பௌத்த உரிமையை பறைசாற்றுகின்றன.
குருந்தூர் மலை குறித்து மகாவசம்சம் உள்ளிட்ட பௌத்த நூல்களில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.குருந்தூர் விகாரரை பௌத்தர்களுக்கு சொந்தமானதா என்பது சந்தேகத்துக்குரியதொரு விடயமல்ல.
குருந்தூர் மலை தமிழர்களுக்கு சொந்தமானது என்பதற்கும் அங்கு இந்து கோயில் இருந்ததற்கும் எவ்வித தொல்பொருள் சான்றுகளும் கிடையாது.
விகாரையில் உள்ள தூண்களில் ஒரு தூண் வட்ட வடிவில் உள்ளது.இந்த தூண் சிவலிங்கம் என்று குறிப்பிட்டு முறையற்ற தர்க்கத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டு குருந்தூர் மலை இந்துக்களுடையது என்ற போலியான தர்க்கத்தை முன்னிலைப்படுத்தி பௌத்தர்களுக்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இந்த நாடகத்தை அரங்கேற்ற அரசாங்கம் இடமளித்துள்ளது.ஆனால் பௌத்த மரபுரிகளை பேணி பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கையுடைய பௌத்தர்களுக்கு இந்த நாடகத்தை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
தமிழ் அடிப்படைவாதிகளின் நாடகத்துக்கு இடமளித்தால் பௌத்தர்களின் மரபுரிமைகள் இல்லாதொழிக்கப்படும்.
பௌத்த மரபுரிமைகளை அழிக்கும் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு அரசாங்கம் கோழைத்தனமாக இருக்கலாம். ஆனால் பௌத்தர்கள் கோழைத்தனமாக இருக்கமாட்டார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருக்கும் காலத்தில் தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளன.அழிக்கப்பட்டுள்ளன.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் வேண்டியதை செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளதால் தமிழ் அடிப்படைவாதிகள் பௌத்த மரபுரிமைகளை அழிக்கிறார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொள்ளுப்பிட்டியில் வாழ்கிறார். அவரின் தந்தையும் கொழும்பில் வாழ்ந்தார் . அவரது பாட்டனாரும் கொழும்பில் வாழ்ந்தார்.
இவர் கொழும்பில் வாழ்ந்துக் கொண்டு விடுமுறை நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று இனவாதத்தை பரப்பி அதனூடாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி சுகபோகமாக வாழ்கிறார்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் வாழ்வதற்கு எவரும் இடையூறு விளைவிக்கவில்லை.
அவரது பரம்பரைக்கும் எவரும் இடையூறு விளைவிக்கவில்லை.கொழும்பில் உள்ள இந்து கோயில்களுக்க நாங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுகிறோம்.தேசிய நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை நாங்கள் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் சாதாரண தமிழர்கள் அடிப்படைவாத தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகளில் இருந்து வேறுப்பட்டுள்ளார்கள்.
அடிப்படைவாத பிரிவினைவாத கொள்கையுடைய தமிழ் அரசியல்வாதிகளின் பிடிகளில் இருந்து தமிழ் மக்களை விடுவித்தால் மாத்திரமே இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த முடியும்.
கொழும்பில் இருந்துக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை இனவாத செயற்பாடுகளில் ஈடுபட தூண்டிவிடும் வரிசையில் பொன்னம்பலம், சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்ட அனைவரும் உள்ளடங்குகிறார்கள்.
தெற்கில் இவர்கள் வாழ்வற்கு உள்ள சுதந்திரத்தை வடக்கில் சிங்களவர்களிடமிருந்து பறிப்பதற்கும் தடையேற்படுத்துவதற்கும் இவர்களுக்கு தார்மீக உரிமையில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும்.
அந்த கோரிக்கையை முன்வைக்க எமக்கு உரிமை உண்டு.ஆகவே சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க இந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் வசிக்கும் வீட்டின் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Related posts