விஷம் கலந்த நீரை கொடுத்த மாணவி

குளியாப்பிட்டி, நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் 06 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் விஷம் கலந்திருந்த நீரை அருந்தியதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மாணவிகளில் ஒருவரே இந்த காரியத்தை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான குறித்த மாணவி காலை நடைபெற்ற காலை கூட்டத்திற்கு வராமல் வகுப்பறையில் தங்கி சக மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் களைக்கொல்லி பொடியை கலந்து கொடுத்தது தெரியவந்துள்ளது.

பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், குறித்த மாணவியால் நண்பிகள் சிலரின் குடிநீர் போத்தல்களில் களைக்கொல்லி கலக்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

களைக்கொல்லி கலந்த தண்ணீரை குடித்துவிட்டு, சக மாணவிகள் வாந்தி எடுத்த நிலையில், அச்சமடைந்த குறித்த மாணவியும் அதே தண்ணீரைக் குடித்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் மாணவத் தலைவி பதவிக்கான போட்டியே இந்த சம்பவத்திற்கு அடிப்படையாக உள்ளதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts