என்றைக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகன் தான்…!

`வாத்தி’ படத்துக்குப் பிறகு தனுஷ் `கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அவரது 51-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா டைரக்டு செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தனுசும், சேகர் கம்முலாவும் தேசிய விருது பெற்றவர்கள் என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதுதவிர மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா 2 என பான் இந்தியா அளவில் செம்ம பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் தனுஷ்.

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படம் இந்த வாரம் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் அனைவரையும் போலவே தனுஷும் உற்சாகத்தில் இருக்கிறார். இவ்வளவு பிசியான நடிகராக இருக்கும் தனுஷ், தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் குறித்து போட்டுள்ள டுவிட்டர் பதிவு செம்ம வைரல் ஆகி வருகிறது.

அந்த பதிவில், இது ஜெயிலர் வாரம் என குறிப்பிட்டு சிரிக்கும் எமோஜிக்களை பதிவிட்டுள்ளார் தனுஷ். ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்ட தனுஷ், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்தாண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டாலும், தனது முன்னாள் மாமனார் ரஜினி மீது அவர் வைத்துள்ள பாசம் இன்னும் குறையவில்லை என்பதற்கு இதுவே சான்று என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரஜினியின் ஜெயிலர் படத்தை தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்க உள்ள படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts