படங்களில் நடிக்க மாளவிகா மோகனன் புதிய நிபந்தனை

தமிழில் ரஜினியுடன் பேட்ட, விஜய் ஜோடியாக மாஸ்டர், தனுசுடன் மாறன் படங்களில் நடித்து பிரபலமான மாளவிகா மோகனன் தற்போது விக்ரமுடன் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

மாளவிகா மோகனன் படங்களில் நடிக்க புதிய நிபந்தனை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் சினிமா துறையில் அடியெடுத்து வைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இனிமேல் எனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்து இருக்கிறேன்.

ரூ.500 கோடி வசூலிக்க கூடிய வெற்றிப்படமாக இருந்தாலும் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்தால் நடிக்கவே மாட்டேன். படம் பிரமாண்டமாக ஓடி வசூல் குவித்தாலும் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரமாக இருந்தால் யாரும் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

அதனால்தான் இந்த ஜாக்கிரதை. நான் சிறு வயதில் இருந்தே விரும்பும் நடிகைகள் ஷோபனா, ஊர்வசி, கஜோல், மாதுரி தீட்சித் ஆவார்கள். அவர்கள் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்தார்கள்.

அவர்கள் வழியில் நானும் செல்ல நினைக்கிறேன். நல்ல படங்களை கொடுக்கும் திறமையான டைரக்டர்கள் படங்களில் நடிக்க ஆசை” என்றார்.

Related posts