பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் இசைக்கச்சேரி

அமெரிக்காவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் இவருக்கு ரசிகர்களாக உள்ளார்கள். கடந்த ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சியாட்டிலில் உள்ள லுமென் பீல்ட் மைதானத்தில் இவரது இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1 லட்சத்து 44 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

கச்சேரியில் பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் பாடலுக்கு ரசிகர்கள் நடனமாடியபோது உள்ளூரில் 2.3 அளவிலான நிலநடுக்கத்திற்கு சமமான நில அதிர்வு இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். தற்போது அது ‘ஸ்விப்டி நிலநடுக்கம்’ என குறிப்பிடப்படுகிறது. இந்த நிலநடுக்கம் சில மணி நேரம் நீடித்ததாக நில அதிர்வு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நில அதிர்வுகளின் சரியான ஆதாரம் நிச்சயமற்றதாகவே உள்ளது. சக்தி வாய்ந்த ஒலிபெருக்கிகள், ரசிகர்களின் அலறல் மற்றும் குதித்து ஆடிய நடனத்தின் விளைவாக இந்த அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், டெய்லர் ஸ்விப்ட்டின் இசைக்கச்சேரி சியாட்டிலின் இசை வரலாற்றில் ஒரு அழியாத முத்திரையை ஏற்படுத்தியது.

தான் ஏற்படுத்திய நில அதிர்வு குறித்து அறியாத ஸ்விப்ட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆரவாரம், செய்து நடனமாடிய ரசிகர்களுக்கு தனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்து உள்ளார்.

Related posts