புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வது

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவையும் கனேடிய அரசியல், சமூகச் செயற்பாட்டாளரான ரோய் சமாதானம், கடந்த வியாழக்கிழமை (15) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பாக தெரிவித்த சமூக செயற்பாட்டாளரான ரோய் சமாதானம், “இலங்கையில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடினேன். குறிப்பாக, இலங்கையில் நிரந்தரமான சமாதான நிலைமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பதோடு, தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக கூடிய கரிசனைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரினேன்.

இதேவேளை, டென்மார்க்கில் வாழ்கின்ற 2 ஆயிரம் பேர் வரையான புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு தடையாகவுள்ள டென்மார்க் அரசாங்கத்தால் வழங்கப்படும் அகதிகளுக்கான பயண ஆவணம் அல்லது கடவுச்சீட்டு (அலையன்ஸ் கடவுச்சீட்டு) ஆகியவற்றுக்கு இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடைகளை நீக்க வேண்டுமென்று கோரினேன்.

டென்மார்க்கிலுள்ள எமது பிரஜைகள் தமது தாய்நாட்டைப் பார்ப்பதற்காக இலங்கைக்கு வருகை தருவதற்கு தயாராகவுள்ளனர். அத்துடன், முதலீடுகளைச் செய்வதற்கும் முன்வந்துள்ளனர். அவற்றினூடாக இலங்கைக்கு அந்நிய செலவாணி வருமானம் கிடைப்பதற்கு சாத்தியமான நிலைமைகள் உள்ளன.

ஆகவே, அவர்கள் இலங்கைக்கு பிரவேசிப்பதற்குரிய தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் கோரினேன். அக்கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிப்பதாக அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் தெரிவித்துள்ளனர்” என்றார்.

Related posts