மோகன்லாலின் ‘புலிமுருகன்’ வசூல் முறியடிப்பு

மலையாளத்தில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை டோவினோ தாமஸின் ‘2018’ படம் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த சாதனையை பெற்றிருந்த மோகன்லாலின் ‘புலிமுருகன்’ ரெக்கார்ட் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘2018’ பாக்ஸ் ஆபீஸிலும் ‘மாஸ்’ காட்டி வருகிறது. இன்றும் கேரளாவில் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 11 நாட்கள் ஆன நிலையில் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது. இதன்மூலம் மலையாள சினிமாவில் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலை குவித்த படம் என்ற பெருமையை ‘2018’ பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ திரைப்படம் 12 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடந்த 2016-ம் ஆண்டு வெளியான மோகன்லாலின் ‘புலிமுருகன்’ திரைப்படம் ரூ.137.35 கோடி வசூலுடன் மலையாளத்தின் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையை பெற்றிருந்தது. தற்போது அந்த ரெக்கார்டை டோவினோதாமஸின் ‘2018’ படம் முறியடித்துள்ளது. படம் வெளியாகி 18 நாட்கள் கடந்த நிலையில் உலக அளவில் ரூ.140 கோடி வரை வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts