மகிந்தவை பிரதமராக்க மனோ விருப்பம்!

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது பிரச்சினை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், எவ்வாறான நியமனங்கள் இடம்பெற்றாலும், பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

“நாட்டில் மிகப் பெரிய ஊழல் நடக்கிறது, “எனக்கு பிரதமர் பதவியை கொடுங்கள் என்று மகிந்த கேட்கிறார், ” யாரிடம் கேட்கிறார்? எமது ஜனாதிபதியிடம், நாங்கள் சொல்கிறோம், தயவுசெய்து அதைச் செய்யுங்கள். தயவு செய்து மகிந்தவை பிரதமராக்குங்கள். பிரச்சினை இல்லை. ஆனால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும். எமக்கு தேர்தலை பெற்றுக் கொடுங்கள். மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கின்றது என்று தெரிந்துக் கொள்ள வேண்டும். நாம் அனைத்துக்கும் தயாராகவே இருக்கின்றோம். நாம் தேர்தலில் வெற்றிப் பெறுவோம் என்பது உறுதி.”

—–

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கு நியமிக்கத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், அந்த பொய்யான செய்திகளை வன்மையாக நிராகரிப்பதாக தெரிவித்தார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts