கஸ்தூரியின் பதிவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ‘நச்’ பதில்

நடிகை கஸ்தூரியின் கேள்விக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பதில் ட்விட்டரில் வைரலாகிவருகிறது.

அண்மையில் சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் இருந்தபோது நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், அவரது மனைவி சாயிராவையும் மேடைக்கு வருமாறு அழைத்தனர். அவர் மேடைக்கு வந்து ரஹ்மான் அருகில் நின்றதும் அவரிடம் ’ஏ.ஆர்.ரஹ்மான், ‘இந்தியில் வேண்டாம், தமிழில் பேசவும்’ என்று கூறுகிறார். உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரிக்க, சாயிரா புன்னகையுடன் ‘கடவுளே’ என்று சொல்லிவிட்டு பேச ஆரம்பிக்கிறார்.

“அனைவருக்கும் மாலை வணக்கம். மன்னிக்கவும். என்னால் தமிழில் சரளமாகப் பேச இயலாது. தயவுசெய்து பொறுத்துக் கொள்ளவும். நான் இன்று மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். காரணம் எனக்கு அவர் குரல் ரொம்பவே பிடிக்கும். நான் அவரது குரலைக் கேட்டே அதில் காதல் கொண்டேன். அதுமட்டும்தான் என்னால் சொல்ல முடியும்” என்றார்.
இதனிடையே, நடிகை கஸ்தூரி இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

கஸ்தூரிக்கு பதிலளிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான், “காதலுக்கு மரியாதை” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Related posts