தமிழ் அரசியல் கைதி சதீஸ் பொதுமன்னிப்பில் விடுதலை

ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ‘விவேகாந்தனூர் சதீஸ்’என அழைக்கப்படும் செல்லையா சதீஸ் கடந்த 15 வருடகாலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கிளிநொச்சி வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வண்டிச் சாரதியாக அவர் இருந்த வேளை , கடந்த 2008ஆம் ஆண்டு பணி நிமித்தம் கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, வவுனியா தேக்கவத்தை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

விடுதலைப்புலிகளுக்கு உதவினாரென குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 2011ஆம் ஆண்டு நீதிமன்றம், அவரைக் குற்றவாளியாக கண்டு, ஆயுள் தண்டனை விதித்தது. அதனை எதிர்த்து அவர் மேன் முறையீடு செய்திருந்தார்.

மேன் முறையீட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்ததுடன் , கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

அதனையடுத்து, தனது மேன் முறையீட்டு மனுவை மீள கையேற்க கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக மனுவை நீதிமன்றத்தில் அவர் கையளித்தார். அதனையடுத்து, அவரின் மேன்முறையீடு மீளளித்தது.

அவரை விடுதலை செய்வதில் நீதி நிர்வாக செயற்பாடுகளில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையே அவருக்கு சிறைச்சாலையிலிருந்து விடுதலை கிடைத்தது.

Related posts