ஹாலிவுட் படங்களில் நடிக்க விரும்பும் ராம்சரண்

ஹாலிவுட் இயக்குனர்களின் படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார் ராம்சரண்.

சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவரது ‘மகதீரா’ உள்ளிட்ட பல படங்களை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்த ‘ஆர் ஆர் ஆர்’ படமும் தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது.

ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து ராம்சரண் அளித்துள்ள பேட்டியில், ”ஆர் ஆர் ஆர் படம் கோல்டன் குளோப் விருதை வென்று சரித்திரம் படைத்துள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி இந்த விருதை பெற்று இருப்பது பெருமையாக இருக்கிறது.

ஆசியாவிலேயே கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் பாடலாக தெலுங்கு பாடல் இருப்பது தெலுங்கு மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. எல்லாம் ஒரு கனவு போல் இருக்கிறது.

இந்த விருது எங்களின் பொறுப்பை மேலும் அதிகமாக்கி இருக்கிறது.

இந்திய சினிமா இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. ஹாலிவுட் இயக்குனர்களின் படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

Related posts