கோல்டன் குளோப் விருது – பிரதமர் மோடி பாராட்டு

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்த படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது. மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. இந்த நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்தது.

திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம்.கீரவாணி இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது கிடைத்துள்ளது.

மேலும் ஆஸ்கார் விருது நாமினேஷனிலும் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் இயக்குனர் ராஜமவுலி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர்.

இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் . படக்குழுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , மிகவும் சிறப்பான சாதனை பாராட்டுக்கள்.

படத்தின் நாயகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், இயக்குனர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோரை டேக் செய்து பாரட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருது ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கோல்டன் குளோப் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு ஆந்திரபிரதேச முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-மந்திரி ஜெகன் மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தெலுங்கு கொடி உயரப்பறக்கிறது.

ஒட்டுமொத்த ஆந்திரபிரதேசத்தின் சார்பாக, எம்.எம். கீரவாணி, ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

Related posts