சினிமாவில் சாதித்த கதாநாயகிகள்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார் நயன்தாரா. கிட்டத்தட்ட 20 ஆண்டு காலம் தென்னிந்திய மொழிப் படங்களில் கோலோச்சி வருவது இவருடைய தனிப்பெரும் பலம். கடந்த ஆண்டு `காத்து வாக்குல ரெண்டு காதல்’, `O2′, `கனெக்ட்’ ஆகிய படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளிவந்தன.

இந்தப் படங்கள் எல்லாமே அவரை முதன்மைப்படுத்தி வந்த படங்கள். மலையாளம், தெலுங்கு மொழியிலும் இவருக்கென்று கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்போது `ஜவான்’ படம் மூலம் இந்தியிலும் அடி எடுத்து வைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் மகளாக சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் சமந்தா. தமிழில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் சமத்தாக இடம் பிடித்த அளவுக்கு தெலுங்கு மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இவர் நடித்த `யசோதா’ படம் வெளிவந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. இந்த ஆண்டு சமந்தாவின் `சகுந்தலம்’ வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சமந்தாவின் வேறு ஒரு பரிமாணத்தை பார்க்க முடியும் என்கிறது படக்குழு.

சினிமாவில் நடிக்க வெள்ளைத் தோலும், நுனி நாக்கு ஆங்கிலமும் இருந்தால் போதும் என்ற மாயையை உடைத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த இவர், அதன் பிறகு பெரிய ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.

கடந்த ஆண்டு இவர் கதையின் நாயகியாக நடித்த `டிரைவர் ஜமுனா’ பெரிய வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு `சொப்பன சுந்தரி’, `பர்ஹானா’, `ரன் பேபி ரன்’ உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி நீண்ட காலம் சினிமாவில் இருந்தாலும் கடந்த ஆண்டு `பொன்னியின் செல்வன்-1′, `கார்கி’, `கேப்டன்’ படங்கள் வெளியாகி இவருக்கு மறக்க முடியாத வருடமாக அமைந்தது.

வருடக் கடைசியில் வெளியான `கட்டா குஸ்தி’ ஐஸ்வர்யாவின் புகழை உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஐஸ்வர்யா ராய் அன்றும் இன்றும் நடிகைகளின் ராணியாக திகழ்ந்து வருகிறார். உலக அழகி பட்டத்தோடு சினிமாவுக்கு வந்தவர்.

தமிழில் அறிமுகமாகி பாலிவுட்டில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு ‘பொன்னியின் செல்வன்-1′ படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் பழைய ஐஸ் ஆகவே வந்து ரசிகர்களை பரவசப்படுத்தினார்.

இதுபோல் கடந்த வருடம் சாய்பல்லவிக்கு `கார்கி’, பிரியங்கா மோகனுக்கு `டான்’, `எதற்கும் துணிந்தவன்’, கீர்த்தி சுரேசுக்கு `குட்லக் சகி’, `சர்காரு வாரி பாட்டா’, `சாணிகாகிதம்’. `

நித்யாமேனனுக்கு திருச்சிற்றம்பலம்’ படங்கள் பெயர் வாங்கிக் கொடுத்தன. இன்னும் சினிமா உலகை திரும்பிப் பார்க்க வைத்த எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். அவர் களின் சாதனையையும் பங்களிப்பையும் தமிழ் சினிமா மறப்பதற்கு இல்லை.

Related posts