கல்விக்கான பிராந்திய வலயமாக இலங்கையை மாற்றியமைப்போம்

25 ஆண்டுகள் முன்னோக்கி செல்லக் கூடிய கல்வித் திட்டங்களே எமது நாட்டுக்கு அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவிப்பு

எமது நாட்டு மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக வருடாந்தம், 03 பில்லியன் டொலர் நிதி செலவாவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

உரிய முறையில் வேலைத்திட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்பட்டால் இந்த மூன்று பில்லியன் டொலர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்கவும் அத்துடன் மேலும் 10 பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியுமென்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.

25 ஆண்டுகள் முன்னோக்கி செல்லக்கூடிய கல்வி திட்டங்களே எமது நாட்டுக்கு அவசியமென சபையில் குறிப்பிட்ட அவர், பாரிய பல்கலைக்கழகங்கள் எம்மிடம்இல்லாவிட்டாலும் கல்விக்கான பிராந்திய வலயமாக இலங்கையை திகழச்செய்ய முடியுமென்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கல்வியமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

1946ஆம் ஆண்டு இலவசக் கல்வி நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.அக்காலத்தில் இருந்ததைப்போல் தொடர்ந்தும் பாடசாலைகளை கொண்டு நடத்த முடியாது. கல்வித்துறையில் மாற்றங்கள் அவசியம். அக்காலத்தில் இயங்கிய பாடசாலைகள் வேண்டுமா? அல்லது 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்ததைப்போல் பாடசாலைகள் வேண்டுமா? என்பதைப் பற்றி சிந்திக்காது 2023ஆம் ஆண்டில் இருந்து 25 ஆண்டுகள் முன்நோக்கிப் பயணிக்கக் கூடிய பாடசாலைகளே எமக்குத் தேவை என்பதை சிந்தித்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எமது மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வியைப் பெற்றுக் கொள்ள ஆகக் குறைந்தது 3 பில்லியன் டொலர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறது.

இந்த மூன்று பில்லியன் டொலர்களையும் நாட்டில் மீதப்படுத்த முடியும். அதற்கு மேலதிகமாக நாம் உரிய முறையில் சிறந்த வேலை திட்டங்களுடன் செயற்பட்டால் மேலும் 10 பில்லியன் டொலர்களை உள்ளீர்த்துக் கொள்ளவும் முடியும்.

இவ்வாறான முயற்சிகளை நாம் மேற்கொள்ளும்போது என் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும்.

இளைஞர்கள் 21 – 22 வயதில் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற வேண்டும்.

அப்படியிருந்தால்தான் அவர்களுக்கு தொழிலுக்கு செல்ல முடியும். தொழில்சந்தைக்குத் தேவையான வகையில் இவற்றை நாம் முறையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிடின், வேலைவாய்ப்புக்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போகும்.

இந்த விடயத்தில் தேசிய சபையும் பாராளுமன்றத்திலுள்ள ஏனைய குழுக்களும் கவனம் செலுத்தவேண்டும்.

இதனை அரசாங்கம் தனியாக மேற்கொள்ளும் போது எதிர்க்கட்சியினர் அதற்கு எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக வீதிகளில் இறங்குவதா? அல்லது பாராளுமன்றம் என்ற வகையில் நாம் அனைவரும் இணைந்து இவ்வாறான வேலைத்திட்டங்களை சாத்தியமாக முன்னெடுப்பதா? என்பது தொடர்பில் சிந்தித்து செயல்பட வேண்டும்.

Related posts