போராட்டங்களை நடத்தி அரசை வீழ்த்த இடமளியேன்

நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கும் வகையில் அரசியலமைப்பை திருத்தம் செய்த, தன்னை இன்று சிலர் சர்வாதிகாரியாகவும், ஹிட்லராகவும் சித்தரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (23) புதன்கிழமை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமில்லை. போராட்டத்தினால் அரசாங்கத்தை வீழ்த்த இடமளிக்க முடியாது.இராணுவத்தை களமிறக்கி, அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்படும்.

நட்டமடையும் அரச நிறுவனங்களை விற்குமாறும், இலாபமடையும் நிறுவனங்களை விற்க வேண்டாமென வும் எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். நட்டமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில் ஆரம்பமானது.

கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்தேன். அப்போது இலாபமடைந்த பல அரச நிறுவனங்கள் விற்கப்பட்டன.

நட்டமடையும் அரச நிறுவனங்களை விற்க வேண்டுமென முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். அதேபோல் எதிர்க்கட்சி தலைவரும் அவ்வாறே குறிப்பிட்டுள்ளார். ஆகவே ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்தை எடுப்போம்.

பாராளுமன்றம் அமைதியான முறையில் கூடும் சூழல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மே மாதம் 09 ஆம் திகதி, ஜுலை மாதம் 09 ஆம் திகதி நாட்டில் எவ்வாறான சூழல் காணப்பட்டது என்பதை அனைவரும் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும். மே 09 ஆம் திகதி சம்பவம் தொடர்பில் பலர், நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

ஆனால் மே மாதம் 09 ஆம் திகதி நாட்டில் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளே இடம்பெற்றன. மக்கள் பிரதிநிதி ஒருவர் நடுவீதியில் மிலேச்சத்தனமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கோட்டா கோ ஹோமென ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர், மயிரிழையில் உயிர் தப்பினார்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எவ்வாறு அனுமதி வழங்குவது?

மே மாதம் 09 ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்து, ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தலைதூக்கினால், படித்தவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்கமாட்டார்கள்.

சண்டியர்கள் மாத்திரம்தான் அரசியலுக்குள் பிரவேசிப்பார்கள். போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும்.

ஜூலை மாதம் (09) போராட்டத்தில் ஜனாதிபதி விரட்டியடிக்கப்பட்டார். ஜனாதிபதி மாளிகை நாசமாக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகம் ஆக்கிரமிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாராளுமன்றத்தை சுற்றிவளைக்க முயற்சித்தனர்.

பாராளுமன்றத்தை சுற்றிவளைத்திருந்தால் நாடு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும்..

ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 17ஆவது திருத்தம், 19 ஆவது திருத்தம் ஆகியவற்றை உருவாக்க முன்னின்று செயற்பட்டவன் நான்.தற்போது சர்வாதிகாரியாக சித்தரிக்கப்பட்டுள்ளேன்.

போராட்டகாரர்களால் மகாநாயக்க தேரர்களும், சர்வ மத தலைவர்களும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டனர்.

பௌத்த மத தலைவர்களை அச்சுறுத்துபவர்கள் எவ்வாறு அரசியலமைப்பின் 09 ஆவது உறுப்புரையின் பிரகாரம் பௌத்த மதத்தை பாதுகாப்பார்கள்.

அனுமதி பெற்ற போராட்டங்களை தடுக்கப்போவதில்லை.

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் நல்லவராயின் பஷில் ராஜபக்ஷ எவ்வாறு கெட்டவரானார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் தற்போது இல்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியுமென்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

போராட்டத்தின் பின்னணியிலிருந்து செயற்பட்ட ஊடகங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

போராட்டம் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றதன் பின்னர், இச்சம்பவம் தொடர்பில் ஆராய ஆணைக்குழுவை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts