மரண தண்டனை வழங்க அலி சப்ரி வலியுறுத்து

பாரிய போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோரைக் கைது செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் நூறு பேரளவிலேயே போதைப் பொருள் வியாபாரிகளாக உள்ளதுடன், விநியோக நடவடிக்கைகளில் முன்னூறு பேரே ஈடுபட்டுள்ளனர்.ஆனால்,ஐந்து இலட்சம் பேர், போதைப்

பொருளுக்கு அடிமையாகி உள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.

போதைப்பொருள் வியாபாரிகளை இல்லாதொழித்து, விநியோக வலையமைப்பை சிதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையாளர்களன்றி போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமென்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பேரிழப்பை பாடசாலை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நஞ்சுகள்,அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

2019ஆம் ஆண்டு நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற போது நீதிமன்றத்தில் இலட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையிலிருந்தன. அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள துரிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்.அத்துடன் காலத்திற்கு தேவையான வகையில் பல சட்டங்களை இயற்றியுள்ளோம். பழமையான பல சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தோம்.

நாட்டில் ஒரு மில்லியன் மக்களுக்கு 15 நீதிபதிகள் உள்ளனர். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் நிலுவையிலுள்ள வழக்குகள் பல தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன.

உலக நாடுகளின் நீதித்துறை கட்டமைப்பில் காணப்படும் சிறந்த விடயங்களை, நமது நாட்டிலும் செயற்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் சுகாதார ரீதியாகவே பார்க்கப்படுகிறார்கள்.

போதைப்பொருள் பாவனையுடன் கைது செய்யப்படுபவர்களின் வழக்குகள் தாமதப்படுத்தப்படுவது போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரிகளுக்கு சாதகமாக அமைகிறது.அந்த வகையில் இத்தகைய வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை துரிதப்படுத்த வேண்டும்.

Related posts