மழைக்காலம் முடிந்ததும் வலி.வடக்கு காணிகள் விடுவிப்பு

பருவமழைக்காலம் நிறைவடைந்ததும்,யாழ். வலிகாமம், வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தீர்க்கமான முடிவெடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்துள்ளார்.

வலிகாமம், வடக்கு, மயிலிட்டி துறைமுகத்துக்கு நேற்று (02) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்கு கடற்றொழிலாளர்களுடன் சந்திப்பிலும் கலந்து கொண்டார்.

இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு தீர்வுகாணும் வகையில், அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

பருவ மழைகாலம் நிறைவடைந்ததும் நேரடியாக சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளாரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கிடைத்த வாய்ப்புக்களை தமிழ்த் தரப்புக்கள் சரியாகப் பயன்படுத்தாததுதான், கடந்த காலங்களில் விட்ட தவறுகளாகும்.

இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டிருக்காது.

தற்போது கிடைக்கும் சாதகமான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, இனியாவது இருப்பதை பாதுகாத்து முன்னோக்கிச் செல்லவேண்டும்.

வலிகாமம், வடக்கு,மயிலிட்டி துறைமுகத்துக்குச் சென்ற அமைச்சர், அங்கு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டதுடன் பிரதேசக் கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, தேவையான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.

பிரச்சினைகள் தீர்வை நோக்கி போகவேண்டும்.

மாறாக குழப்பும் நோக்குடன் எவரும் செயற்படக்கூடாது. இதனை குழப்பிக்கொண்டு போகும் நோக்கம் எனக்கில்லை”என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Related posts