நான் நடிக்கிறது தான் பிரச்சினையா?

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற தொகுதி செயலாளர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- உலக அளவில் பேரல் விலை உயரும்போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதாக மத்திய அரசு சொல்கிறது. ஆனால் பேரல் விலை குறையும்போதும் இங்கு விலை ஏற்றப்படுகிறது என்பதே உண்மை. ஆகவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்.
பெட்ரோல் டீசல் விலை குறைந்தால் விலைவாசியும் குறைந்து விடும். பாராளுமன்றத் தேர்தல் 2024 நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக எங்களின் முடிவை தெரிவிப்போம்.
மக்களுக்கு சேவை செய்ய தேர்தல் களத்துக்கு வரவேண்டும். ஆனால் இன்றைக்கு தேர்தலில் போட்டியிட சாதாரண குடிமகன்கள் தயக்கப்படுகிறார்கள். ஏனென்றால் பெரிய அளவில் பணம் செலவழிக்கப்படுகிறது. ஆகவே அதற்கு ஈடு கொடுத்து நம்மால் முடியாது என்று ஒதுங்குகிறார்கள்.
இது உண்மையான ஜனநாயகம் கிடையாது. நாம் தயங்கும்போது கூட்டணிக்கு செல்ல நேரிடுகிறது. இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் விவாதிக்க இருக்கின்றோம். 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் எங்கள் கட்சி நிர்வாகிகள் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் தனித்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நான் நடிப்பதால் மட்டுமே சமூகம் கெட்டுப் போகவில்லை. ஆன்லைன் ரம்மி ஆன்லைன் கிரிக்கெட் போன்றவை உலக அளவில் இருக்கிறது. இதில் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன.
நாமக்கல்லில் ஒருவர் ஆன்லைன் ரம்மி பார்த்து விளையாடி தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல. அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்துவதும் தடை செய்வதும் அரசின் கையில் இருக்கிறது. இதற்கு ஒட்டுமொத்தமாக சட்டத்தை கொண்டு வந்து தடுக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆன்லைன் ரம்மி, டாஸ்மாக் போன்றவற்றை தடை செய்து நாட்டை திருத்துங்கள்.
போதை பொருள் விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒதுக்கினால் அடக்க முடியும். தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் முன்னணி கட்சிகளாக இருக்கின்றன.
அ.தி.மு.க.வில் இப்போது அடித்துக் கொள்வதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அ.தி.மு.க.வின் எதிர்காலம் குறித்து சொல்ல நான் ஜோசியர் இல்லை. ஒற்றுமை இல்லை என்றால் எதிர்காலம் இல்லை.
முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும். தெலுங்கு தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டிலும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உட்கார்ந்து விரைந்து பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த இருக்கிறது என்று கேட்டதற்கு, மின் வாரியத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது.
மாநில அரசின் வருவாயையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டால் மாநில அரசுகள் இங்கு தேவையில்லை. விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்று முதல்வரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

Related posts