அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த மாபெரும் அழிவு!

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே கோடீஸ்வரர்களுக்கு வரிச்சலுகை வழங்கி நாட்டின் அழிவுக்கான கதவைத் திறந்தார்கள் என்றும் அதனோடு நிற்காமல் சீனி மோசடி, தேங்காய் எண்ணெய் ஊழல், பூண்டு ஊழல் என மோசடிகளுக்கே இடமளித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

அன்று மத்திய வங்கி மோசடி குறித்து கூச்சலிட்ட தினேஷ் குணவர்தன இன்று பிரதமராக உள்ளதாகவும், மத்திய வங்கி மோசடியை விட பாரதூரமான சீனி மோசடி குறித்து அவர்கள் மௌனமாக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த மக்களும் இன்று பாரிய அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நிலை 2019ஆம் ஆண்டு மக்கள் எடுத்த தவறான தீர்மானங்களின் விளைவே எனவும் தெரிவித்தார்.

இந்நாட்டில் ஜனநாயக உரிமையைக் கோரி போராடிய இளைஞர்களுக்கு எதிராகச் செயற்பட்டு அவர்களை ஒடுக்கி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான கேவலமான வேலைத்திட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பதாகவும் கூறினார்.

இன்று, அவரும் அப்படித்தான் இவரும் அப்படித்தான் எனக்கூறி தம்மை சுத்தப்படுத்த முயலும் சில குழுக்கள் சுனாமி திருடர்களை இந்நாட்டின் ஜனாதிபதிகளாக்கியமையை நாம் மறந்துவிடக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு தொகுதி அமைப்பாளர் திரு.சி.வை.ஜி.ராம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பாரிய அளவிலான செயற்குழு உறுப்பினர்கள் சந்திப்பொன்று நேற்று (28) பிற்பகல் நடைபெற்றது.ஏராளமானோர் இதில் கலந்து கொண்டதுடன் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் மொட்டுக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து போட்டியிடும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டில் எஞ்சியுள்ள ஒரே தெரிவு ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியுமே எனவும் தெரிவித்தார்.

Related posts