எதிர்க்கட்சி தலைவர் சஜித் எடுத்துள்ள தீர்மானம்

மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்து முன்னாள் பிரதமரையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் எனவும், ஆனால் அதன் பின்னர் எழுந்த மாற்று அணி முன்னைய நிலையை விட பாரதூரமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதி நியமனம் செய்யப்பட்ட மறுநாள் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சியின் வகிபாகத்தை நிலைநாட்டும் அதேவேளையில், நாடாளுமன்றக் குழு முறைமையின் ஊடாக அரசாங்கத்தின் சாதகமான செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாக தான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,சர்வ கட்சிகளும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சி இதுவே என்றும் அவர் தெரிவித்தார். அதை விடுத்து சர்வ கட்சி ஆட்சி என்பது அமைச்சு பதவிகள் பெற்று வரப்பிரசாதங்கள் சலுகைகளைப் பெற்று நாடக அரங்கேற்றங்களை மேற்கொள்வதல்ல எனவும் தெரிவித்தார்.

225 பேரும் ஒரே மாதிரி என்ற நிலைப்பாடு பொருத்தமல்ல என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், 134 என்பதுவே சரியானது எனவும் தெரிவித்தார்.

மக்கள் சக்திக்கு முன்னால் அரசாங்கம் தோற்கடிக்கப்படும் என்பது உறுதி என தெரிவித்த எதிர்கட்சித் தலைவர், அதன் பிறகு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொது உடன்பாட்டை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அனைத்து வெகுஜன தொழிற்சங்கங்க அமைப்புகள்,தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் போன்றவற்றை ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் திட்டவட்டமான புரிந்துணர்வு எட்டப்பட வேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்காக தேசிய பேரவை ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை பயன்படுத்த இடமளிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தேசிய சபைக்கு வரும் முற்போக்கான முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (23) காலை நடைபெற்ற ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

நடந்தது ஒரு ஜனாதிபதித் தேர்தல் அல்ல என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இடைக்கால ஜனாதிபதியை நியமிப்பதற்காக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பே உண்மையில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.நாட்டில் மக்கள் அபிப்பிராயம் முற்றாக திரிபுபடுத்தப்பட்டுள்ள போதிலும், பாராளுமன்றத்தின் நிலைமை அவ்வாறானதாக இல்லை என்பதை முடிவுகள் தெளிவுபடுத்துவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தான் அதற்கு தாம் முகம் கொடுக்க முன் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts