உணவு நெருக்கடியால் 40 – 50 இலட்சம் பேர்

எதிர்காலத்தில் உணவு நெருக்கடியானது 40 தொடக்கம் 50 இலட்சம் இலங்கையர்களை நேரடியாகப் பாதிக்கக் கூடியதாக இருந்தாலும், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று (17) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

உணவு நெருக்கடியைத் தணிக்கும் முயற்சிகளை ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான குழுவொன்றை நியமிக்கவும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். இந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் வலியுறுத்தினார்.

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 336 பிரதேச செயலகங்களின் அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டு செயற்படுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்காக, அதன் 225 பிரிவுகள் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஏனையவை அமைச்சுகள் மற்றும் தனியார் துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடமும் பிரித்து கையளிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இதற்காக பிரதேச செயலகங்களில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மீனவ சமூகத்தினருக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் விவாசயத்திற்கு அவசியமான எரிபொருளை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

குறிப்பாக சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்களில் உணவுப் பாதுகாப்பிற்கு விசேட முக்கியத்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதேபோன்று, பிராந்திய ரீதியில் போட்டித்தன்மை கொண்ட சந்தையை உருவாக்கும் நவீன விவசாய முறைக்கான நடுத்தர மற்றும் நீண்ட காலத் திட்டத்தின் அவசியத்தையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நளின் பெனாண்டோ, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக, மனோ கணேசன், பீ. திகாம்பரம், ரிஷாட் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நவீன் திஸாநாயக்க, சமன் ரத்னப்பிரிய, செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts