‘கேஜிஎஃப்’ 3-ம் பாகத்தின் முதற்கட்ட பணி

‘கேஜிஎஃப்’ படத்தின் 3-வது பாகத்தை தயாரிப்பதற்கான ப்ரீ புரோடக்ஷன் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கெளடா தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியானது ‘கேஜிஎஃப் 2’. பான் இந்தியா படமான இதில், சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் வெளியான நான்கே நாட்களில் ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இதனிடையே படம் முடிந்த பிறகு ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியையும் படக்குழு வைத்திருக்கிறது. படம் முடிந்து வெளியே செல்ல முயலும் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில், ‘கேஜிஎஃப்’ 3-ம் பாகம் வெளியாகும் என்பதை குறிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் எப்போது வெளியாகும், யார் யார் நடிப்பார்கள் என்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கௌடா, ‘கேஜிஎஃப் 3-ம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது’ என கன்னடா செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். விரைவில் படத்தின் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறினார்.
கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீலை பொறுத்தவரை அவர், பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ‘சாலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ‘கேஜிஎஃப்’ 3ம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது.

Related posts