இது ஒன்றும் பரம இரகசியம் அல்ல

225 எம்பீகள் கொண்ட நாடாளுமன்றத்தில், ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. ஏனைய எதிர்கட்சிகளை சேர்த்தாலும் பெரும்பான்மை இல்லை. இது எமக்கு தெரியும். இது ஒன்றும் பரம இரகசியம் அல்ல.

எனினும் நாம் இதை சபையில் வாக்கெடுப்புக்கு கொண்டு வருவோம். அப்போது நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் யாரென அறியும் வாய்ப்பு வருகிறது. இன்று தெற்கு, மலையகம், மேற்கு, வடக்கு, கிழக்கு என நாடு முழுக்க அரசை எதிர்த்து போராடும் மக்கள், தாங்கள் வாக்களித்து தெரிவு செய்த எம்பீக்களின் இலட்சணங்களை அறிய அரிய வாய்ப்பு வருகிறது. எதிர்போரும், நடுநிலை வகிப்போரும் மக்கள் மன்றங்களில் துகிலுரியப்படுவார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதி கோதாபயவின் ஒட்டு மொத்த அரசாங்கத்துக்கும் எதிரானதாகும். அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சியாக நாமும் இணைந்தே இதை கொண்டு வருகிறோம்.

இந்நிலையில், இந்த, நம்பிக்கையில்லா பிரேரணை என்பது ஜனாதிபதி, பிரதமர் ஆகிய தனிநபர்களுக்கு எதிரானது என காட்டி தப்ப எவரும் முயல கூடாது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு எதிராகவும் நாம் அவசிய நடவடிக்கைகளை எடுப்போம். இவர்கள் இருவரையும் காட்டு காட்டென நாம் காட்டுவோம்.

ஆனால் இது முதலில் முழு அரசாங்கத்துக்கும் எதிரானதாகும். அரசாங்கத்திலிருந்து வெளியே வந்ததாக சொல்லும் அனைவரும் இதை ஆதரிக்க வேண்டும். முட்டாள் காரணங்களை சொல்லி எவரும் மக்களை முட்டாளாக்க முயல கூடாது.

Related posts