வதந்திக்கு அலியா பட் முற்றுப்புள்ளி

‘தற்செயலாக நடக்கும் சில சம்பவங்களை கொண்டு தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என்று பாலிவுட் நடிகை அலியா பட் தெரிவித்துள்ளார்.
‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் எதிர்பார்ப்புக்கேற்ற வரவேற்பை இந்தியா முழுவதும் பெற்றுவருகிறது. ரூ.500 கோடி வசூலைத் தாண்டி ஈர்த்து வரும் நிலையில், சில தினங்கள் முன் இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகை அலியா பட், அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் எதிர்பாராத்ததுபோல் இல்லாமல், குறைந்த சீன்களே ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அலியாவின் இந்த அதிருப்திக்கு காரணம் என்று சொல்லப்பட்டது.
அதிருப்தியின் காரணமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜமௌலியை அன்ஃபாலோ செய்துள்ள அலியா, ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ராஜமௌலி தொடர்பான புகைப்படங்களையும் நீக்கியுள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதனிடையே, தற்போது இந்தச் சம்பவத்துக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே விளக்கம் கொடுத்துள்ளார் அலியா பட். அதில், “தற்செயலாக நடக்கும் சில சம்பவங்களை கொண்டு தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் எப்போதும் பழைய பதிவுகளை நீக்கி எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சீரமைத்துக் கொள்வேன்.
ஆர்ஆர்ஆர் போன்ற படத்தில் நடித்ததை நினைத்து நான் பெருமையாகவே உணர்கிறேன். சீதா பாத்திரத்தில் நடிப்பதையும், ராஜமௌலி சார் இயக்கத்தில், டாரக் மற்றும் ராம்சரண் உடன் இணைந்து நடிப்பதையும் நான் நிறையவே விரும்பினேன். இன்னும் சொல்லப்போனால், ஆர்ஆர்ஆர் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு நொடியும், சின்னச் சின்ன சம்பவங்களும் எனக்கு நிறைய அனுபவத்தை கொடுத்தது.இப்போது நான் கவலைப்படுவதற்கும், உங்களிடம் இதை தெளிவுபடுத்துவதற்கும் ஒரே காரணம், ராஜமௌலி சார் மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் அந்தப் படத்துக்கு உயிர் கொடுக்க பல ஆண்டுகள் கொடுத்த உழைப்பு ஏராளம். எனவே இந்தப் படம் தொடர்பாக என்னைத் தொடர்புபடுத்தி வரும் அனைத்து தகவல்களையும் நான் மறுக்கிறேன்” என்று தனது விளக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார் அலியா பட்.

Related posts