துபாய் புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் புறப்பட்டார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி செல்கிறார். உலக கண்காட்சிகள், மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும். 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த நிகழ்வானது, 6 மாத காலங்களுக்கு நடைபெறும். துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி. இந்த உலகக் கண்காட்சி, துபாய் நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடந்து வருகிறது.

இந்த உலக கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில் 25-ந்தேதி (நாளை) முதல் 31-ந்தேதி வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகக் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை 25-ந்தேதி (நாளை) திறந்து வைக்கிறார்.

இந்தநிலையில், 4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு செல்ல சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் மு.க.ஸ்டாலின். பின்னர் துபாய் செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த குழுவில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள்.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க, துபாய் புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு; அங்குள்ள தமிழர்கள், பிரமாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர்.

முன்னதாக , தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக கொண்டு வர தனது துபாய், அபுதாபி பயணம் துணை நிற்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related posts