ஒரு லீற்றர் டீசலுக்கு 120 ரூபா நஷ்டம்

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையில் டீசல் விலை களை அதிகரித்தாலும் ஒரு லீற்றர் டீசலுக்கு 120ரூபா நஷ்டத்தை சுமக்க வேண்டியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் டீசலுக்கு 120ரூபா நஷ்டம் ஏற்படுகின்ற போதிலும், ஒரு லீற்றர் டீசல் 55ரூபாவினால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலைகள், பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை மட்டுமே ஈடுசெய்யும். டீசலுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய லீற்றருக்கு 120ரூபாவால் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

40,000மெட்ரிக் தொன் டீசலை இறக்குமதி செய்வதற்கு முன்னர் 32மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டன. எனினும் உலக எரிபொருள் விலையேற்றம் காரணமாக 51மில்லியன் டொலர்களாக அது அதிகரித்துள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் பழைய விலைக்கே எரிபொருளை விற்பனை செய்திருந்தால், இந்த மாதம் 26பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என விஜேசிங்க தெரிவித்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர், ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 77 ரூபாவினாலும், ஒரு லீட்டர் டீசலின் விலை 55 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது. சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 254 ரூபாவாகும். ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றுக்கு 77 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 254 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றுக்கு 76 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 283 ரூபாவாகும்.

Related posts