ரஷிய ராணுவ டாங்கி மீது சிறுநீர் கழித்த உக்ரைனியர்கள்

ரஷிய படையினரால் கைவிடப்பட்ட ராணுவ டாங்கி மீது உக்ரைனியர்கள் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன
இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது.

இதற்கிடையில், இரு நாடுகளுக்கு இடையேயான போரில் உக்ரைன் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் சில பகுதிகளில் ரஷிய படைகள் தங்கள் ராணுவ வாகனங்களை கைவிட்டுவிட்டு வெளியேறிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

அந்த வகையில், உக்ரைனின் கக்ஹொவா மாகாணத்தில் உள்ள சப்லெஹா நகரில் ரஷியாவின் எம்டி-எல்பு ரக ராணுவ டாங்கியை ரஷிய படையினர் கைவிட்டு சென்றனர். இதனால், அந்த ராணுவ டாங்கி அங்கு சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பகுதியில் வசித்து வந்த உக்ரைனியர்களில் சிலர் கைவிடப்பட்ட அந்த ரஷிய ராணுவ டாங்கி மீது சிறுநீர் கழித்துள்ளனர். உக்ரைனியர்கள் ரஷிய ராணுவ டாங்கி மீது சிறுநீர் கழிக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அந்த ரஷிய ராணுவ டாங்கி மீது உக்ரைன் கொடியையும் அவர்கள் ஏற்றியுள்ளனர்.

Related posts