இலங்கையில் தினமும் 7½ மணி நேரம் மின்வெட்டு

மின் வெட்டினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க முடியவில்லை.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார சிக்கல் நிலவுகிறது. நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளதால், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இயலாத நிலை தொடர்கிறது.

அங்குள்ள பெட்ரோல், டீசல் நிலையங்களில், நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருக்கின்றன. எரிபொருள் இல்லாததால், மூன்று அனல் மின் நிலையங்களின் செயல்பாடு முழுமையாக முடங்கியுள்ளது. இதனால் மின் பற்றாக்குறை அதிகரித்து மின்வெட்டு தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், இலங்கையில் நேற்று முதல் தினமும் 7½ மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. சுழற்சி முறையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மின் வெட்டினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க முடியவில்லை. தொடர்ந்து மின்வெட்டு நீடித்தால் இலங்கை மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் அபாய சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த 26 ஆண்டுகளில் இலங்கையில் இதுபோன்ற ஒரு மின் வெட்டு அமல்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இலங்கையில் கடந்த 1996- ஆம் ஆண்டு கடுமையான மின் வெட்டு ஏற்பட்ட்டது. மின் தேவைக்காக 80 சதவீதம் நீர் மின் நிலையங்களை அப்போது இலங்கை சார்ந்திருந்தது. அந்த வருடத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியால் நீர் நிலைகள் வறண்டன. இதனால், மின் உற்பத்தி இன்றி கடுமையான மின் வெட்டு அந்த சமயத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

Related posts