இலங்கை அரசின் அத்துமீறலை தடுக்க உரிய நடவடிக்கை

இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. இதை இனியும் இந்திய அரசு அனுமதிக்கக்கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை, அவர்களின் படகுகளுடன் இலங்கை படை கைது செய்திருக்கிறது. இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. இதை இனியும் இந்திய அரசு அனுமதிக்கக்கூடாது.

ஜனவரி 31-ந்தேதி 21 பேர், பிப்ரவரி 8-ந்தேதி 11 பேர், தற்போது 12 பேர் என கடந்த இரு வாரங்களில் மட்டும் மொத்தம் 3 முறை 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிடம் உதவி பெறும் இலங்கை, இந்திய இறையாண்மை மீது தொடர் தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்கக்கூடாது.

இன்று கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் உள்பட இதுவரை கைது செய்யப்பட்ட 44 மீனவர்களையும், அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts