பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம்

43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்டமூலம் வர்த்தமானியாக வெளியிடுவதற்கும் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தரம் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை இராஜதந்திர சமூகத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தடுப்புக் காவல் ஆணைகள், தடை உத்தரவுகள், உத்தரவுகளை நீதித்துறை மறுஆய்வு செய்தல், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பது, நீண்ட கால காவலில் வைப்பதைத் தடுப்பது ஆகியவற்றை விரைவுபடுத்த முயல்கிறது.

நீதவான்கள் மற்றும் நீதித்துறை வைத்திய அதிகாரிகளை அணுகுவதற்கும், தடுப்புக்காவலின் போது சித்திரவதைகளைத் தடுப்பதற்கும், நாளாந்தம் வழக்குகளை விசாரிப்பதற்கும் விசேட திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts