தள்ளி வைக்கப்பட்டது ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ்..!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராக உள்ளது.

வருகிற 7-ந்தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பரவலின் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படக்குழு படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து படக்குழு கூறியதாவது:-

‘நாம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், சில சூழ்நிலைகள் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. அந்த வகையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக பல இந்திய மாநிலங்கள் திரையரங்குகளை மூடியிருப்பதால், படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதை தவிர வேறு வழியில்லை.

உங்கள் உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். இந்திய சினிமாவின் பெருமையை மீண்டும் கொண்டு வருவோம் என்று உறுதியளித்திருந்தோம் சரியான நேரத்தில் அதைச் செய்வோம்’ என்று கூறினர்.

Related posts