“மற்ற பசங்க எல்லாம் ஜாலியாக இருக்கும்போது நாம் மட்டும் ஒரு பக்கம் ஷூட்டிங், இன்னொரு பக்கம் படிப்பு என்று கஷ்டப்படுகிறோமே என்று நினைப்பேன். சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டேன்” என்று நடிகர் சிலம்பரசன் கண்கலங்கியபடி பேசினார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா இன்று (மே 24) நடைபெற்றது. இதில் நடிகர் சிம்பு பேசும்போது, “சிறுவயதில் எல்லா பசங்களையும் வெளியே அழைத்துச் செல்வார்கள்.
சாக்லேட் வாங்கித் தருவார்கள். படத்துக்கு, கடற்கரைக்கு அழைத்துச் செல்வார்கள். ஆனால் பிறந்தது முதலே எனக்கு நடிக்கச் சொல்லிக் கொடுத்தார்கள்.
அப்போதெல்லாம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். மற்ற பசங்க எல்லாம் ஜாலியாக இருக்கும்போது நாம் மட்டும் ஒரு பக்கம் ஷூட்டிங், இன்னொரு பக்கம் படிப்பு என்று கஷ்டப்படுகிறோமே என்று நினைப்பேன்.
சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் இன்று 40 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு காரணம் என் அம்மா, அப்பா தான். என் அப்பாவை இங்கே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். காரணம் அவர் மிகவும் எமோஷனல் ஆகிவிடுவார். ஆனால் நானே இங்கு எமோஷனல் ஆகிவிட்டேன்” என்று கண்கலங்கியபடி சிம்பு பேசினார்.
மேலும் பேசிய அவர், “இந்த படத்தில் நான் பேசிய ஒரு டயலாக்கை வைத்து சமூக வலைதளங்களில் கமல் சாருக்கு அடுத்து சிம்புதான் அந்த இடத்தை பிடிக்கப் போகிறார் என்று பேசுவதை பார்க்கிறேன். ’தேவர் மகன்’ என்று ஒரு படம் வந்தது. அதில் சிவாஜியும் கமல்ஹாசனும் நடித்திருந்தனர். அதன் அர்த்தம் சிவாஜி இடத்தை கமல்ஹாசன் பிடித்துவிட்டார் என்பதல்ல. சிவாஜி கணேசன் மிகப்பெரிய ஆளுமை. அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.
அதே போல கஷ்டப்பட்டு, உழைத்து, நெட்டையாக, குட்டையாக, அசிங்கமாக, அழகாக விதவிதமாக நடித்துதான் அவர் தனக்கான இடத்தை பிடித்தாரே தவிர யாரும் அவருக்கு கொடுக்க வில்லை. அதுதான் உலகநாயகன் கமல்ஹாசன். இளம் தலைமுறையினர் தன்னுடைய தோளில் ஏறிச் செல்லுங்கள் என்று ஒரு பேட்டியில் அவர் சொல்லியிருந்தார். நான் அவரை ஒரு ஏணியாக பார்க்கிறேன். அவரை மதித்துதான் மேலே செல்வேனே தவிர, மிதித்து அல்ல” இவ்வாறு சிம்பு பேசினார்.