ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கேம் சேஞ்சர்’. இப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இப்படம் தொடங்கப்பட்டபோது எடிட்டராக ஷமீர் முகமது பணிபுரிந்து வந்தார். ஆனால், படம் வெளியாக தாமதமானதால் இறுதியில் ரூபன் எடிட்டராக பணிபுரிந்திருந்தார்.
தற்போது எடிட்டர் ஷமீர் முகமது அளித்த பேட்டி ஒன்றில், “‘கேம் சேஞ்சர்’ எடிட்டிங் அனுபவம் ஒரு பயங்கரமானது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “‘கேம் சேஞ்சர்’ எடிட்டிங் செய்யும்போது, படத்தின் ஆரம்ப நீளம் ஏழரை மணி நேரமாக இருந்தது. அதனை மூன்று மணி நேரமாக குறைத்தேன். 3 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வேறு படத்தின் பணிகள் காரணமாக, ‘கேம் சேஞ்சர்’ படத்தில் இருந்து வெளியேறிவிட்டேன்.
துரதிருஷ்டவசமாக ஷங்கர் சாருடன் பணிபுரிந்த அனுபவம் இனிமையானதாக இல்லை. அது ஒரு பயங்கரமான அனுபவம்” என்று தெரிவித்துள்ளார் எடிட்டர் ஷமீர் முகமது. இந்தப் பேட்டியை முன்வைத்து இயக்குநர் ஷங்கரை பலரும் சாடி வருகிறார்கள். அந்தக் காட்சிகளுக்கான செலவுகள் எவ்வளவு ஆகியிருக்கும், ஏன் திட்டமிடல் இல்லாமல் எடுத்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.