ஷாலினி செய்த தியாகங்கள்

என் குடும்பத்தினர் எனக்கு தரும் ஆதரவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் மனைவி ஷாலினி நிறைய தியாகங்களை செய்திருக்கிறார் என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித், “பட்டங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெயருக்கு முன்னால் பட்டப் பெயர்கள் போடுவதை விட என்னை அஜித் அல்லது ஏகே என்றே அழைக்க விரும்புகிறேன். இதுவும் ஒரு தொழில் அவ்வளவுதான். நான் ஒரு நடிகன். என்னுடைய வேலையை செய்வதற்காக நான் சம்பளம் பெறுகிறேன். புகழ், அதிர்ஷ்டம் எல்லாம் நமது வேலையின் மூலம் கிடைப்பவை.

என்னுடைய வேலையை நான் நேசிக்கிறேன். அதை 33 ஆண்டுகளாக செய்து வருகிறேன். என்னால் முடிந்தவரை எனது வாழ்க்கையை எளிமையாக வைத்திருக்கிறேன். அதிகமாக யோசிப்பதைத் தவிர்க்கிறேன். ஒரே நேரத்தில் அதிக படங்களை ஒப்புக் கொள்வதில்லை. என்னுடைய மற்ற பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களில் கவனம் செலுத்துகிறேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு பத்ம பூஷண் விருது கிடைத்ததை இன்னும் என்னால் நம்ப இயலவில்லை. மனதளவில் நான் இன்னும் ஒரு மிடில் கிளாஸ் நபராகவே இருக்கிறேன். இங்கே இருப்பது, இந்த உணர்வுகள் அனைத்தையும் அனுபவிப்பது எனக்கு ஒரு கனவுலகம் போல இருக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உணர்கிறேன்.

என் குடும்பத்தினர் எனக்கு தரும் ஆதரவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் மனைவி ஷாலினி நிறைய தியாகங்களை செய்திருக்கிறார். அவர் மிகவும் பிரபலமானவராக, மக்களால் நேசிக்கப்பட்டவராக இருந்தார். அவர்தான் எனக்கு ஒரு தூணாக இருந்து வருகிறார். இந்த பிரபஞ்சத்துக்கு நான் மிகவும் நன்றியுள்ளனவாக இருக்கிறேன்.
நான் எடுக்கும் முடிவுகள் தவறானவையாக இருந்த காலகட்டங்கள் இருந்திருக்கின்றன. அப்போதெல்லாம் என்னோடு தோள்நின்று, என்னை பின்னிழுக்காமல், எனக்கு உறுதுணையாக இருந்தார். என் வாழ்க்கையில் நான் சாதிக்கும் விஷயங்கள் அனைத்துக்குமான பெருமையும் அவரையே சேரும்” என்று அஜித் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த ஏப்.28 நடைபெற்றது. இவ்விழாவில், நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அரசியல், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் அஜித்துக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Related posts