Top

பாட்டு டீச்சர் கொலை வழக்கில் சினிமா உதவி இயக்குநரிடம் விசாரணை

October 4, 2009

அசோக் நகர் பாட்டு டீச்சர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, வேல்முருகனின் நண்பரான சினிமா உதவி இயக்குநரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனியில் பாட்டு டீச்சர் அனந்தலட்சுமி, அவரது மகன் சூரஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் அனந்தலட்சுமிக்கு ஆண் நண்பர்கள் பழக்கம் அதிகம் இருப்பது தெரியவந்தது. இதனால், கிறிஸ்டோபர், கணேஷ் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். கடைசியாக, வேல்முருகன் என்பவரும் கடந்த ஓராண்டாக அனந்தலட்சுமியுடன் நெருங்கிப் பழகி வந்தது தெரிந்தது.

அதனால், அவரைத் தேடியபோது தலைமறைவானார். இதற்கிடையே, மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், வேல்முருகன் பற்றி அவரது நண்பர்கள் கிறிஸ்டோபர், ஆரணியைச் சேர்ந்த கணேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், வேல்முருகனுக்கு சினிமா உதவி இயக்குநர் சுந்தர் என்பவருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது. கிறிஸ்டோபர், வேல்முருகன், சுந்தர் ஆகியோர், சைதாப்பேட்டையில் ஒரே அறையில் தங்கியிருந்ததும் தெரிந்தது. இதனால், சுந்தரிட மும் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

14 வயதில் குற்றம் செய்தால் சிறை செல்ல வேண்டும் புதிய சட்டம்.

October 4, 2009

jail3.jpg 

டென்மார்க் 04.10.09 ஞாயிறு இரவு.

 டென்மார்க்கில் உள்ள சிறு பிள்ளைகள் குற்றச் செயலில் ஈடுபட்டால் மிகச்சிறு வயது காரணமாக அவர்களை சிறைக்கு அனுப்புவது தவிர்க்கப்பட்டு வந்தது. இப்போது இந்த வயதெல்லை மேலும் குறைக்கப்பட்டு 14 வயதாக மாற்றப்படவுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அரசின் கூட்டுக்கட்சிகளிடையே இது முக்கிய விவாதமாக நடைபெற்று வந்தது. கொன்ஸ்சவேட்டிவ் இதை எதிர்த்து வந்தது, இப்போது அதுவும் படிமானத்திற்கு வந்துள்ளதால் 14 வயதில் குற்றம் செய்தால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கலாம் என்ற புதிய சட்டம் அமலுக்கு வரவுள்ளது. தண்டனை வயதை 14 ஆகக் குறைக்க வேண்டுமென இளையோர் கமிஷன் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது. பிள்ளைகளிடையே அதிகரிக்கும் குற்றச்செயல்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர இப்படி சட்டத்தை மாற்ற வேண்டிய அழுத்தம் அரசிற்கு ஏற்பட்டுள்ளது.

டேனிஸ் படைத்துறைத் தலைமை அதிகாரி பதவி விலகுவதாக அறித்தார்.

October 4, 2009

forsvas-flash-02.jpg 

டென்மார்க் 04.10.09 ஞாயிறு இரவு.

படைத்துறை உறுப்பினர் வெளியிட்ட நூல் இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்துகிறது. இது தொடர்பான சர்ச்சையில் இந்த பதவி விலகல் இடம் பெறுகிறது.. Read more

புவனேஸ்வரியை எப்படி கைது செய்தோம் போலீசார்

October 3, 2009

bhuvaneswari2.jpg 

விபச்சார வழக்கில் நேற்று புவனேஸ்வரியை எப்படி கைது செய்தோம் என்ற தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர். அரசியல் புள்ளியின் படத்தைக் காட்டி போலீஸ் நிலையம் வர மறுத்த புவனேஸ்வரியை தந்திரமாகப் பேசி அழைத்து வந்து கைது செய்துள்ளனர் விபச்சாரத் தடுப்புப் போலீசார்.

சைதாப்பேட்டை கோர்ட்டில் நேற்றே ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

‘பாய்ஸ்’, ‘குண்டக்க மண்டக்க’ போன்ற படங்களில் விபசார அழகியாக நடித்த நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.

35 வயதாகும் இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார். ஏற்கனவே விபசார வழக்கில் சிக்கி, பின்னர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டவர் புவனேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது.

மீனாகுமாரி, புவனா, சுருதி என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. தற்போது நிறைய தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வந்தார். நிறைய நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சி உடைகளில் நடனமாடி வந்தார்.

அடுத்த கட்டமாக இவர் சமூக இயக்கம் ஒன்றையும் தொடங்க முயற்சி செய்து வந்தார். அதற்கு அரசியல்வாதிகள் சிலரது ஆசியும் இருந்தது.

சென்னை சாஸ்திரி நகர், 1-வது அவென்யூ, ரமணீயம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை புவனேஸ்வரி வசித்து வருகிறார். அந்த வீட்டில் நடிகை புவனேஸ்வரி விபசாரம் செய்வதாகவும், மேலும் அழகிகளை வைத்து விபசார தொழிலும் நடத்துவதாகவும் போலீசாருக்கு சிலர் ரகசிய தகவல் கொடுத்தனர். உடனே அவரைப் பிடிக்க விபசார தடுப்பு போலீசார் ரகசிய திட்டம் போட்டனர்.

ஆந்திர தொழில் அதிபர் போல…

மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சந்திரகாசன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் இதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடிகை புவனேஸ்வரியிடம் ஆந்திர தொழில் அதிபர் ஒருவர் பேசுவது போல செல்போனில் பேசினார்கள்.

ஆந்திர தொழில் அதிபர் என்பதால் புவனேஸ்வரி உல்லாசத்துக்கு சம்மதித்தார். ‘ஒரு மணி நேரம் மட்டுமே என்னோடு இருக்க முடியும், அதற்கு ரூ.30 ஆயிரம் வேண்டும்’ என்று பேரம் பேசினாராம். போலீசாரும் அதற்கு சம்மதித்து, போலீஸ்காரர் ஒருவரை தொழில் அதிபர் வேடத்தில் அனுப்பினார்கள்.

நேற்று பகல் 11 மணி அளவில் அந்த போலீஸ்காரர் நடிகை புவனேஸ்வரி வீட்டுக்கு சென்றார். அவரை பார்த்ததும் வீட்டில் இருந்த புவனேஸ்வரி அன்போடு ‘வாங்க, வாங்க’ என்று தெலுங்கில் பேசி உபசரித்தார். தெலுங்கு தொழில் அதிபர் என்று நினைத்து இந்த உபசரிப்பை புவனேஸ்வரி வாரி வழங்கியுள்ளார். அவர் போலீஸ்காரர் என்பது அப்போது அவருக்கு தெரியாது.

நான் வேண்டும் என்றால் ரூ.30 ஆயிரம் கொடுங்கள், வேறு பெண் வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் போதும் என்று வீட்டுக்குள் இருந்த மேலும் 2 பெண்களையும் காட்டினாராம்.

அப்போது மாறுவேடத்தில் சென்ற போலீஸ்காரர், ‘அந்த பெண்கள் வேண்டாம், நீங்கள்தான் வேண்டும்’ என்று ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்தார். பணத்தை வாங்கிக்கொண்டு தனி அறைக்கு அழைத்து சென்ற போது வெளியில் தயார் நிலையில் காத்து இருந்த தனிப்படை போலீசார் வீட்டு கதவை தட்டினார்கள்.

தலைவரை மீறி கைது செய்வீர்களா…

புவனேஸ்வரி வந்து கதவை திறந்தார். வெளியில் நின்ற போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர், தன் வீட்டுக்குள் மாட்டப்பட்டிருந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் படத்தைக் காட்டி “அவர்தான் என் தெய்வம், அவரை மீறி என்னை கைது செய்ய முடிந்தால் செய்து கொள்ளுங்கள்” என்று மிரட்டியுள்ளார். ஆனால் போலீசார், “உங்களை கைது செய்ய மாட்டோம், நீங்கள் என்று தெரியாமல்தான் வந்து விட்டோம், உங்களை விசாரணைக்கு பிறகு விட்டு விடுகிறோம்!” என்று சமாதானப்படுத்தினார்களாம்.

வீட்டில் இருந்த அஞ்சலி, டோலிசெட் என்ற மேலும் 2 மும்பை அழகிகளையும் போலீசார் பிடித்தனர். 3 பேரையும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள விபசார தடுப்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு வழக்கமான விசாரணை முடிந்ததும் புவனேஸ்வரியைக் கைது செய்தனர். அவருடன் பிடிபட்ட மற்ற 2 பெண்களையும் பாதிக்கப்பட்டவர்களாக போலீசார் வழக்கில் சேர்த்தனர்.

கைது செய்வதாக போலீசார் கூறியதும், புவனேஸ்வரி அழுதி அரற்றினாராம். என் பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டுட்டீங்களே… என்று போலீசாரைப் பார்த்து சபித்தாராம்.

அவரது வாக்குமூலம்…

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் என் சொந்த ஊராகும். நான் ஜமீன் குடும்பத்தில் பிறந்தவள். பி.காம் பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கும் போதே எனது உறவினரான பாண்டியன் என்பவரை எனக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர் என்னோடு நீண்ட நாள் வாழவில்லை. மகன் பிறந்தவுடன் பிரிந்து சென்று விட்டார்.

நான் கல்லூரியில் நாடகத்தில் நடித்துள்ளேன். நடனமும் நன்றாக ஆடுவேன். எனது நாடகத்தை பார்த்து சென்னையில் உள்ள துணிக்கடை விளம்பரத்தில் மாடலிங்காக நடிக்க வைத்தனர். ஊறுகாய் விளம்பரம் ஒன்றிலும் நடித்தேன்.

சினிமாவில் வாய்ப்பு வர ஆரம்பித்தது. அந்த நேரத்தில் 2002-ம் ஆண்டு இதே போல் போலீசார் என்னை விபசார வழக்கில் கைது செய்து விட்டனர். அதனால் எனது சினிமா வாழ்க்கையே இருண்டு போய்விட்டது. பின்னர் நான் நிரபராதி என்று வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.

அதன்பிறகு ‘பாய்ஸ்’, ‘குண்டக்க மண்டக்க’ போன்ற படங்கள் எனக்கு மறுவாழ்வை கொடுத்தன. டி.வி சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். தெலுங்கு படங்களில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. இப்போது எனது வாழ்க்கை ஓரளவு பரவாயில்லை. எனது மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

எத்தனையோ நடிகைகள் விபச்சாரம் செய்கிறார்கள்…

என் வாழ்க்கையில் மட்டும்தான் இப்படி விதி விளையாடுகிறது. மீண்டும் போலீசார் என்னை பிடித்து விட்டனர். என்னை போன்ற எத்தனையோ நடிகைகள் தவறு செய்கிறார்கள். ஆனால் அவர்களை எல்லாம் போலீசார் நெருங்குவதில்லை. 2-வது முறையாக எனது வாழ்க்கையை நொறுக்கி விட்டார்கள். கடவுள் விட்ட வழி… இந்த முறையும் இருட்டில் இருந்து மீண்டு வருவேன் என்று நம்புகிறேன்…” என்று அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

3 சட்டப்பிரிவுகள்…

புவனேஸ்வரி மீது விபசார தடுப்பு சட்டம் பிரிவு 3/1, 4/1. 5/1 ஆகியவற்றின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரிடம் இருந்து செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. நேற்று மாலையில் புவனேஸ்வரியை போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அழைத்து சென்றார்கள்.

அவரை படம்பிடிக்க 20-க்கும் மேற்பட்ட பத்திரிகை புகைப்படகாரர்கள் கூடி நின்றனர். ஆனால் யாருடைய காமிராவிலும் முகத்தை காட்டாமல் கறுப்பு துணியால் மூடியபடி புவனேஸ்வரி சென்று விட்டார்.

15 நாள் நீதிமன்ற காவலில் அவர் புழல் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் வீட்டில் மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு பெண்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர்.

நடிகர் – புரோக்கர் கைது…

இதே போல சூளைமேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அழகிகளை வைத்து விபசாரம் செய்த சதீஷ் (27) என்ற புரோக்கரும் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் இருந்து மாயா, கீதா என்ற 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.

சதீஷ் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். பிரபல விபசார தாதா கன்னட பிரசாத்தின் நெருங்கிய கூட்டாளியான சதீஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரமெஷ் என்ற விபசார புரோக்கரை குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

October 1, 2009

புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கக் கூடாது : அமெ. அரசு தெரிவிப்பு 
ama21.jpg 

விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ் தொழிற் கட்சி ஆகிய தடை செய்யப்பட்ட இயங்கங்களுக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என ஒபாமா அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

குறித்த இரண்டு அமைப்புக்களுக்கும் ஆதரவு வழங்கப்பட வேண்டுமென லொஸ் ஏஞ்சல்ஸை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமை அமைப்புக்கள் அமெரிக்க நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளன.

எனினும், இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாகவும், 2010ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் இந்த வழக்கு விசாரணைகள் மீதான தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இவ்வாறு பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்குவோருக்கு 15 ஆண்டுகள் முதல் ஆயுட் காலம் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானதென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், குறித்த இரண்டு அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்குவதைச் சட்ட ரீதியாக அங்கீகரிக்குமாறு அமெரிக்க மனித உரிமை நிறுவனம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சட்ட அங்கீகாரம் வழங்குமாறு தெரிவித்து குறித்த நிறுவனம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது

எனது விசா இரத்துக்கு இந்தியாவின் தமிழ் அமைச்சரே காரணம்: எலின் ஷான்டர் குற்றச்சாட்டு

October 1, 2009

ellen.jpg

எனது விசா இரத்துக்கு இந்தியாவின் மத்திய அமைச்சில் இருக்கக்கூடிய தமிழ் அமைச்சர் ஒருவரே காரணம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி டொக்டர் எலின் ஷான்டர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ‘விகடன்’ குழுமத்தின் ‘ஜூனியர் விகடன்’ வாரம் இருமுறை இதழ் வெளியிட்ட நேர்காணல் விபரம் வருமாறு:

டொக்டர் எலின் ஷான்டர்… போர்க்குணம் கொண்ட இந்தப் பெண்மணி, அமெரிக்காவின் புகழ்பெற்ற டொக்டர் கூடவே மனித உரிமை போராளி! ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்த்து உலகெங்கும் கர்ஜித்துக் கொண்டே இருக்கிறார். வட அமெரிக்காவில் ஒரு மாநாட்டில், இவரது உரையைக் கேட்ட கவிஞர் வைரமுத்து, “எலின் ஷான்டர் வெள்ளைக்கார தமிழச்சி…” என்று வியந்தார்! இலங்கை அகதி முகாம்களில் இருந்து அப்பாவி மக்களை விடுவிக்கக் கோரி மெக்சிக்கோ நகரில் கடந்த 22 ஆம் நாள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினார், எலின் ஷான்டர். இவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து ஒரு கருத்தரங்கத்தில் பேச வைக்க வைகோவும், மா.நடராஜனும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், இந்திய அரசு இவருக்கு விசா வழங்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டோம்…

“இந்திய அரசால் உங்கள் விசா கடைசி நேரத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறதே..?”

“உண்மையில் இந்தியாவுக்கு வர ஒரு மாதம் முன்பே விசா கிடைத்து விட்டது. ஆனால், நான் புறப்படும் இரு தினங்களுக்கு முன்பு, விசா கேன்சல் செய்யப்பட்டதாக போன்… இந்தியாவில் இருக்கும் ஒரு மத்திய தமிழ் மந்திரியின் வற்புறுத்தலின் பேரில்தான் விசா கேன்சல் என கூறினார்கள். இந்தியாவில் கருத்துரிமைக்கும் பேச்சுரிமைக்கும் இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. உலகில் வேறெங்குமே நடக்காத ஒரு கொடூரம், தமிழகத்திலிருந்து வெகு அருகில் உள்ள இலங்கையில் நடந்தும்… அதற்கான எதிர்ப்பு இந்தியாவிலிருந்து எழவில்லை. இதற்கு பதில் கேட்கத்தான் இந்தியாவுக்குப் புறப்பட்டேன். கடைசியில் தடுக்கப்பட்டேன். ஆனாலும் நான் இந்தியா வர போராடுவேன்..!”

“அமெரிக்கரான நீங்கள் அகதி முகாம்களில் வாடும் அப்பாவி தமிழர்களுக்காக போராட முன்வந்தது ஏன்?”

“இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாஜி முகாமில் அடைத்து வைக்கப்பட்டு, பெரும் சித்ரவதைகளுக்குப் பிறகு என்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்தேன்… தனி மரமானேன். உலகின் எந்த மூலையில் ஒரு குறிப்பிட்ட இனம் கொடுமைப்படுத்தப்பட்டாலும், அது என்னை பாதிக்கும். அந்த வலி தெரியும். முன்பு இலங்கையில் சுனாமி நிவாரண பணிகளில் ஈடுபட்டேன். அப்போது தமிழீழ மக்களின் அன்பும், மன தைரியமும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர்களின் சொந்தக்காரியாகவே என்னை நினைக்கிறேன். இனப்படுகொலையால் அங்கே இறந்த ஈழத் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொருவரும் மகன், அப்பா, அம்மா என உறவுகளை இழந்து தவிப்பது பேரவலம். மே மாதத்தில் மட்டும் 30,000 அப்பாவி மக்களை தமிழினம் இழந்தது. பல்லாயிரக்கணக்கானோர், முடமாகியும் அநாதையாகியும் அவதிப்படுகின்றனர். அவர்களுக்காக நான் போராடுவதுதான் மனித நேயத்துக்கான சரியான அடையாளம்…”

“இலங்கை அகதி முகாம்களைப் பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்கள் உங்களுக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்களே?”

“ஆம். பருவ மழை தொடர்ந்து பெய்வதால், இப்போது அகதி முகாம்களில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அம்மை நோய் பரவுகிறது. உணவு, சுகாதாரம் எதுவுமே அங்கே சரியாக இல்லை. வாரத்துக்கு 1,500 பேர் கொல்லப்பட்டு, முகாமின் வேலிகளுக்கு வெளியே திறந்த வெளியில் வீசப்படுகிறார்கள். யாராவது கேட்டால் சித்ரவதை செய்து கொன்று அவரையும் வீசிவிடுகிறார்கள். பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்துவதோடு, உடைகளே தராமல் பிறந்த மேனியாக அலையவிட்டிருக்கிறார்கள். யுனிசெஃப்பின் வவுனியா மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் சிங்கள மருத்துவர்கள் ஊசி போட்டுக் கொன்று வருவதாக எனக்கு தகவல்கள் வருகின்றன. எவரையும் தங்கள் குடும்பத்தோடு வைக்காமல், வெவ்வேறு முகாம்களில் பிரித்து, கொடுமைப்படுத்தி வருகின்றனர். இதுவரை முகாமில் 10 ஆயிரம் மக்கள் காணாமல் போயிருக்கின்றனர். எங்கு சென்றனர், என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை! என்னைப் பொறுத்தவரை, உலகிலேயே இதுதான் மிகப்பெரிய, கொடிய சிறைச்சாலை!”

“செஞ்சிலுவை சங்கத்தினருக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் உரிய பாதுகாப்பும் மரியாதையும் இலங்கையில் கிடைக்கிறதா?”

“பல்வேறு பத்திரிகையாளர்களும், மனித உரிமைக் குழுவினரும் இலங்கையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது உலகத்துக்கே தெரியும். யுனிசெஃப், செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு துளி கூட பாதுகாப்பு கிடையாது. பல்வேறு யுனிசெஃப் பெண் பிரதிநிதிகள்கூட பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போரில் சிக்கி உயிரிழந்தார்கள் என்று இலங்கை அரசு சொன்ன உதாரணங்களும் நிறைய இருக்கிறது. ஹிட்லரை விடவும் மோசமானவர் ராஜபக்ச… அதை நிரூபிக்கும்படியான சம்பவங்கள்தான் இலங்கையில் நடந்துகொண்டே இருக்கின்றன!”

“இலங்கை நிலவரம் குறித்து, ஒபாமா அல்லது ஹிலாரி கிளிண்டனிடம் பேசினீர்களா?”

“இருவரிடமும் பேசும் வாய்ப்பு அமையவில்லை. அமெரிக்க ஸ்டேட் செக்ரெட்டரி ராபர்ட் பிளேக்கிடம் இது குறித்து விரிவாகப் பேசினேன். அவர், ஒபாமாவிடம் பேசுவதாக கூறினார். விரைவில் இந்தப் பிரச்னை குறித்து மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக என்னிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார் ராபர்ட்…”

”நீங்கள் பேசிய ஒரு சி.டி-யில் “தமிழீழம் மலரும்” என்று கூறியுள்ளீர்கள். அதற்கான சாத்தியக்கூறு என்ன?”

“தனித் தமிழீழம், இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமை. இலங்கையை முழு சிங்கள தேசமாக மாற்றலாம் என்று வெறித்தாண்டவம் ஆடும் ராஜபக்சவுக்கு, உலக நாடுகளிடமிருந்து மிகப்பெரிய கண்டனங்களும் ஆபத்துகளும் இனிதான் வரப் போகின்றன. குறிப்பாக, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் தமிழீழம் அமைய உதவும். மற்ற நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து இவ்விஷயத்தில் கைகோக்கும்… பொறுத்திருந்து பாருங்கள்!”

“உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?”

”கண்ணிவெடிகளைக் களையெடுக்கிறோம் என்ற பேரில் சிங்களரை தமிழர் பகுதியில் குடியேற்றம் செய்துவரும் ராஜபக்சவிடம், அகதி முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை உடனே விடுவிக்கக் கோரி உலக நாடுகளை ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்த இருக்கிறோம். இனியும் விடுதலைப் புலிகள் என்று அப்பாவி மக்களை சித்ரவதை செய்வதை அனுமதிக்கக் கூடாதென உலக நாடுகள் கிளர்ந்து எழும். இலங்கைக்கு செய்துவரும் இராணுவ, வாணிப ரீதியான உதவிகளை முடக்க உலக நாடுகளில் விழிப்பு உணர்வு மாநாடுகள் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இதனால் எதிர்காலத்தில் இலங்கை அரசு பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்!”
 

புலிகளின் தலைவர்கள் சிலர் இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட உள்ளனரா?

September 30, 2009

இலங்கை அரசின் தடுப்புக் காவலில் கொழும்பில் உள்ள புலித் தலைவர்கள் சிலர் ( திலகர், கே.பி, பாலகுமார் மற்றும் யோகி…….???) தமிழர்களின் தேசிய அபிலாஷைகளைப் புறந்தள்ளிவிட்டு, அரசியல்தீர்வின் கொழும்பு-அமெரிக்கா கூட்டுமுறையில் இணைந்து செயற்பட இணங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத சில அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்த இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும், வெளிநாட்டு அமைச்சர் ரோகித பொகொல்லகமவும் இதுகுறித்து அமெரிக்காவுடன் விளக்கமாக கலந்துரையாடவே சென்றுவந்ததாகவும் கூறப்படுகிறது. புலிகளமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சிறைகளிலுள்ள சந்தேக நபர்கள் விவகாரங்களை அமெரிக்கா கையாளவேண்டும் என்றும் இவர்கள் இருவரும் கேட்டுள்ளனர்.

இதேவேளை செப்டம்பர் 21 ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸிடம் கையளிக்கப்பட இருந்த அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற மீறல் அறிக்கையானது கோத்தபாயவின் தலையீட்டைத் தொடர்ந்தே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிறெஸ் அறிக்கை கூறியுள்ளமையும் இங்கு சுட்டிக் காட்டப்படத்தக்கது.

போர்க்காலத்தில் பணியாற்றிய 5 வன்னி மருத்துவர்களையும் பெருமதிப்புக் கொடுத்து கௌரவிக்கவேண்டிய கட்டத்தில், இலங்கையரசு அவர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்ற வாக்குமூலத்தைப் பெற்றபோது சர்வதேசம் வாய்கட்டி வேடிக்கை பார்த்தது. இதற்குள் பயங்கரவாதத்தை அமெரிக்கா எவ்வாறு கையாண்டது என அறிவதற்காக இலங்கை சட்டமா அதிபர் அமெரிக்கா பயணமாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தடுப்புக்காவலில் உள்ள சுமார் 15,000 புலிகளையும் சிறப்பு நீதிமன்றங்களில் நிறுத்தி விசாரணை செய்வதே இலங்கை அரசின் திட்டம் என உள்ளூர் செய்திகள் கூறுகின்றன.

ஆனால், போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்கொள்ள முனையும் இலங்கைத் தலைமையோ தற்போது புதியதொடு முறைப்படி அமைந்த அரசியல் தீர்வுத் திட்டத்துடன் அமெரிக்காவை அணுகுவதாக அவதானிகள் கருத்துக் கூறியுள்ளனர். ஆனால் இதுகுறித்து அமெரிக்காவின் பதில் என்ன என்பது இன்னமும் தெரிய வரவில்லை. ஆனால் ஐ.நா நிரந்தரப் பிரதிநிதி பாலித கோஹொன “வெற்றியீட்டியவர்களை தொந்தரவு செய்யமுடியாது’ எனக் கூறியதில் இருந்து அவர்களின் தாம் கூறுவதை அனைவரும் ஏற்க வேண்டும் என உள்ள மனப்போக்கு புரிகின்றது.

இதற்கிடையில் கொழும்பு-அமெரிக்கா தீர்வு குறித்து இந்தியாவும் கவலை கொள்வதாகத் தெரிகிறது. இந்தியாவை எப்போதுமே விரோதமாகப் பார்த்தார்கள் சிங்களவர்கள், இப்போது ஈழத்தமிழர்களும் அப்படியே பார்ப்பதால் இந்தியாவுக்கு ஏதேனும் சமூக நலன்கள் கிடைப்பதென்பது கடினமாக இருக்கும் எனவும் அவதானிகள் கூறுகிறார்கள்.

சுற்றியுள்ள நாடுகளின் நிலைப்பாடு என்னவென்றாலும், இப்போதைய செய்தி உண்மையென்றால், இதுவரை காலமும் தமிழர்களின் தேசிய அபிலாஷைகளுக்காகப் போராடிய தேசியத் தலைவரின் வழியில் சென்ற, இப்போது அரசின் பிடியிலுள்ள தலைவர்களில் யார் யார் எமது மக்களுக்கு விரோதமாக அரசு காட்டும் பதவி மோகத்துக்கு மசியப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிய வந்துவிடும்.

புலிகளின் ஆதரவாளர்கள் என்பதை அடையாளம் பிரிக்கப் போவது யார்?

September 30, 2009

 dinamani.jpg

பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் தனது நாவல் ஒன்றில் கூறுவார்~சிறிய மீன்களுக்குப் பேசும் சக்தி கிடைக்குமேயானால் அவை தங்களை திமிங்கலங்களாக நினைத்துப் பேசத் தொடங்கும் என்று. அதுபோலத்தான் இருக்கிறது, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைப் பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயகாவின் பேச்சு. ஐ.நா. சபையின் 64-வது பொதுக் கூட்டத்தில் பேசிய இலங்கைப் பிரதமர் உலக நாடுகளின் கூட்டமைப்புக்கு விடுத்திருக்கும் வேண்டுகோள் (எச்சரிக்கை?) என்ன தெரியுமா? எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதீர்கள் என்பதுதான்!
இலங்கைப் பிரதமரின் வாக்குமூலப்படியே பார்த்தாலும், கடந்த மே மாதம் முடிவுக்கு வந்த போரின் முடிவில் 2.85 லட்சம் பேருக்கு மேலானவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து இடம்பெயர்ந்து சொந்த மண்ணில் அகதிகளாக முள்கம்பிகளாலான வேலிக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களை அடையாளம் கண்ட பிறகு ஏனைய மக்கள் அவரவர் ஊர்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார் இலங்கைப் பிரதமர்.
விடுதலைப் புலிகள் அல்லது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்பதை  அடையாளம் பிரிக்கப் போவது யார்? வட இலங்கைப் பகுதியிலிருந்த பெருவாரியான மக்கள் விடுதலைப் புலிகளின் அனுதாபிகளாக இருந்திருக்கும் வாய்ப்பு உண்டே. அப்படியானால், அவர்கள் அனைவரையும் தண்டிக்கப்போகிறதா இலங்கை அரசு? இனப்படுகொலையைத் தொடர இதுவேகூட ஒரு சாக்காக ஆகி விடாது என்பது என்ன நிச்சயம்?
தனது மக்கள் என்று தமிழர்களை சொந்தம் கொண்டாடும் இலங்கை அரசு, அவர்களுக்கு மருந்தும், உணவும், உடையும் அன்னிய நாடுகள் வழங்க வேண்டும் என்று கையேந்துவதிலிருந்தே, தனது கஜானாவிலிருந்து சல்லிக்காசுகூடத் தமிழர்களுக்குச் செலவிட அந்த அரசு தயாராக இல்லை என்பதைத்தானே எடுத்துக்காட்டுகிறது? முன்பே பலமுறை குறிப்பிட்டதுபோல, அது வளம் கொழிக்கும் அமெரிக்காவாகவே இருந்தாலும் மூன்று லட்சம் பேரைக் கம்பி வேலிக்குள் அமைக்கப்பட்ட முகாம்களில் ஐந்து மாதத்துக்கும் மேலாக சகல வசதிகளுடன் பாதுகாப்பது சாத்தியம்தானா?
ஆயிரக்கணக்கான அகதிகள் குடியமர்த்தம் என்கிற பெயரில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதைப்பற்றி எழுதினாலோ, பேசினாலோ, பயங்கரவாதிகளுக்குத் துணைபோனதாகக் கூறி அடக்குமுறைச் சட்டங்கள் பாய்கின்றன. ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றி மகாகவி பாரதி எழுதியதுபோல, “இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்’ என்பது ஈவிரக்கமே இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஐ.நா. சபையின் வளர்ச்சித் திட்டம் என்கிற போர்வையில் ஹலேஸ் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் இலங்கைப் பிரதமர். இதன் மூலம் அம்பாறை மாகாணத்தின் விவசாய வளர்ச்சிக்கு உதவி பெறுகிறது இலங்கை அரசு. இந்த உதவிக்குக் காரணம் அகதிகளைக் குடியமர்த்தி அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பது என்பதுதான். ஆனால் அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மாகாணம், பெரிய அளவில் சிங்களவர்களைக் குடியேற்றிப் புதிதாக உருவாக்கப்பட்ட அம்பாறை. தமிழர்களைக் குடியமர்த்துகிறோம் என்கிற போர்வையில் சிங்களவர்களுக்குத்தான் உதவும் இந்தத் திட்டம்.
எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் ஐ.நா. தலையிடக்கூடாது என்று என்ன தைரியத்தில் இலங்கைப் பிரதமர் கூறுகிறார்? அமெரிக்காவின் விரலசைப்புக்கு ஏற்பச் செயல்படும் ஐ.நா. சபைக்கே மறைமுக எச்சரிக்கை விடுமளவுக்கு இலங்கைக்கு தைரியம் வந்தது எப்படி? சீனாவின் முழுமையான ஆதரவு தனக்கு இருக்கிறது என்கிற ஆணவமா, இல்லை இந்திய அரசு கண்டும் காணாமலும்தான் இருக்கும் என்கிற துணிவா? இத்தனைக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவே இலங்கையில் படுதுயர் அனுபவிக்கும் தமிழ் அகதிகளின் நிலைமை குறித்து வேதனைப்படும் நிலையில், இலங்கை அரசு ஐ.நா. சபை தலையிடாமல் இருக்க வேண்டும் என்று கூறுவது அதிர்ச்சி அளிக்காமல் என்ன செய்யும்?
கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் எல்லாம் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கின. அங்கே நடப்பது ஓர் இனப்படுகொலை என்று உணர்ந்து செயல்பட்டன. ஆனால் நமது இந்தியாவில் நடப்பது என்ன? இன்னும் 115 முகாம்களில் சுமார் 73,572 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர். சுமார் 30,000 பேர் வெளியே தங்கியுள்ளனர். கால் நூற்றாண்டு காலமாக இங்கே வசித்துவரும் இவர்கள் இன்றுவரை அகதிகள்தான். அவர்களுக்குக் குடியுரிமை வழங்க நமது அரசு தயாராக இல்லை.
வங்க தேசத்திலிருந்து ஊடுருவி வரும் லட்சக்கணக்கான அகதிகள் இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள். இவர்களில் முக்கால்வாசிப் பேர் ரேஷன் அட்டையும், வாக்காளர் அட்டையும் வைத்திருக்கிறார்கள். கேட்டால் வங்காளிகள் என்று தப்பித்துக் கொள்கிறார்கள். தேர்தலில் நின்று ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினரான அவலம்கூட அசாமில் அரங்கேறியது. ஆனால், 25 ஆண்டுகாலமாக இங்கே இருக்கும் இலங்கைத் தமிழர்கள் இப்போதுகூட அகதிகள்தான்.
காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் இவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது, மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு வழங்குவது மற்றும் கச்சத்தீவை மீட்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானம் நிறைவேற்றுவதுடன் நின்றுவிடாமல் இந்தப் பிரச்னைக்குத் தீர்மானமான முடிவையும் காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
சீனா என்கிற பூச்சாண்டியைக் காட்டி இந்தியாவை எத்தனை காலம்தான் இலங்கை பயமுறுத்தப் போகிறது? நாமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்? இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், தனிமரியாதையுடனும் வாழ்ந்தால் மட்டுமே இந்தியா பாதுகாப்புடனும் தலைநிமிர்ந்தும் உலக அரங்கில் வலம்வர முடியும் என்கிற உண்மையை, தில்லித் தலைமைக்கு யார் உணர்த்துவது?
நெஞ்சுரம் கொண்ட கடைசிப் பிரதமர் இந்திரா காந்திதான் என்று தோன்றுகிறதே…

அனுராதபுரம் சிறைச்சாலை உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

September 29, 2009

jail2.jpg
 விடுதலை செய்யப்பட வேண்டும் எனக்கோரி, அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை மாலை கை விட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் அனுராதரபுரத்திற்கு விஜயம் செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்பே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் இந்தப் பிரச்சினை குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக ஐந்து வார கால அவகாசம் கோரி, அக்காலப்பகுதிக்குள் இந்தப் பிரச்சினைக்கு எப்படியும் முடிவு காணப்படும் என அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுவதற்குத் தமிழ் அரசி்யல் கைதிகள் முன்வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளின் நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் கோரியுள்ள கால அவகாசத்தினுள்ளே தமது பிரச்சினைக்கு முடிவேற்படாவிட்டால் தாங்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அனுராதபுரத்தில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மிடம் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி செவ்வாய்க்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வி்டுதலை வேண்டி அ’புரம் சிறைச்சாலை தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதம்

September 28, 2009

prison2.jpg
 
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, திங்கட்கிழமை நண்பகல் முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்கு அரசியல் கைதிகள் கொண்டு வந்துள்ளனர்.

இரண்டு தொடக்கம் ஐந்து வருடங்கள் வரையில் எந்தவிதமான வழக்கு விசாரணைகளுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுகின்ற இவ்வேளையில், விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் இவர்கள் கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

தண்ணீர் மாத்திரம் அருந்தி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள இவர்கள் நீதி அமைச்சின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நேரில் வந்து தங்களிடம் உறுதிமொழி வழங்கும் வரையில் தமது உண்ணாவிரதம் தொடரும் எனத் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தன் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் தலைவர்களாக இருக்கின்றார்கள். பல முன்னணி தலைவர்கள் இன்று அரசாங்கத்திடம் சரணடைந்துள்ளனர்.

அவர்களில் சிலர் விசாரணைகளின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தங்களைத் தடுத்து வைத்திருப்பது குறித்து அவர்கள் பெரிதும் விசனம் தெரிவித்திருப்பதாகவும் ஆனந்தன் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் 43 பேருக்கு ஆதரவாக மகசின், பூஸா, வெலிக்கடை உட்பட ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

« Previous PageNext Page »

Bottom