காமன்வெல்த் ஏற்பாட்டில் ஊழல்?
July 31, 2010
டெல்லியில் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளில் பெருமளவு ஊழல்கள் நடந்திருப்பதாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விளையாட்டுக் கட்டமைப்புக்களுக்கான கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை, நடந்து முடிந்த பணிகள் தரமற்றவையாக உள்ளன போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
போட்டிகள் துவங்குவதற்கு முன்பு பணிகள் நிறைவடையுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஏற்பாடுகளில் ஊழல் நடந்திருப்பதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன.
பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக் குழுவினர், நான்கரை லட்சம் பவுண்டுகளை வழங்கியிருப்பதாக ஒரு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்துக்கு மாதந்தோறும் 25 ஆயிரம் பவுண்டுகள் வழங்கப்படுவதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் வருவாய் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், இந்திய தூதரகத்துக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருப்பதாகவும், காமன்வெல்த் ஏற்பாட்டுக் குழுவுக்கும் லண்டனில் உள்ள குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கும் எழுத்துப்பூர்வமான எந்த ஒப்பந்தமும் ஏற்படாமல் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் அதிகாரிகள் அளித்த தகவல்களை, மேல் நடவடிக்கைக்காக இந்திய விளையாட்டு அமைச்சகத்துக்குப் பரிந்துரைத்திருப்பதாக லண்டனில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்னொரு புறம், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளுக்கான டெண்டர்கள் மற்றும் கொள்முதல் நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்துமாறு, மத்திய கண்காணிப்பு ஆணையம் தனது அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, ஊழல் புகார்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சுரேஷ் கல்மாதி மறுத்திருக்கிறார்





Comments
Got something to say?
You must be logged in to post a comment.