கடல்நீர் குடிநீராக மாறும் ஆலை சென்னையில்
July 31, 2010
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தினந்தோரும் 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றக் கூடிய சுந்திகரிப்பு ஆலை சனிக்கிழமை முதல் செயல்படவுள்ளது. இந்த ஆலையின் மூலம் ஒரு லிட்டர் கடல் நீரை குடிநீராக மாற்ற 5 பைசாவுக்கு குறைவாகவே செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆயிரம் லிட்டர் குடிநீர் 48 ரூபாய் 66 பைசாவுக்கு வாங்கப்படும் என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் தலைவர் சிவதாஸ் மீனா தமிழோசையிடம் தெரிவித்தார். தற்போது நாளோன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் நகரில் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
சென்னை நகரில் பல ஆண்டுகளாக குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நீர்த் தேவைகளை சமாளிக்க தெலுங்கு கங்கை திட்டம், வீராணம் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டன. ஆயினும் இத்திட்டங்களால் தேவையை முற்றாக ஈடு செய்ய முடியவில்லை. எனவே தொழில்நுட்பத்தின் துணை நாடப்பட்டுள்ளது.
இந்த ஆலை 600 கோடி ரூபாய் செலவில் தனியாரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் வேறு சில கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் போல நீரை கொதித்து ஆவியாக்கி சுந்தம் செய்வதில்லை என்றும் அதிக அழுத்ததில் ‘ஜவ்வு’ வழியாக நீரை செலுத்தி சுத்திகரிப்பு செய்வதால் குறைந்த விலையிலேயே நீரைத் தர முடிகிறது என்றும் சென்னை வாட்டர் டிசாலினேஷன் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் என் கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மத்திய அரசின் நிதி மானியத்துடன் சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மற்றொரு கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை 2012 ஆம் ஆண்டில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





Comments
Got something to say?
You must be logged in to post a comment.