ஈழத் தமிழர் சிவந்தன் நடைப்பயணம் வைகோ வாழ்த்து
July 30, 2010
இலங்கைத் தமிழர்களை காக்கக் கோரியும், போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிபர் ராஜபட்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோரியும் பாரிஸ் நகரிலிருந்து ஜெனீவா நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ஈழத் தமிழர் சிவந்தனுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அழிவின் பிடியிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காக்கவும், கொடூரக் கொலைகளைப் புரிந்த ராஜபட்ச கூட்டத்தை அனைத்துலக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கவும், உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் இடையறாத போராட்டங்கள், கிளர்ச்சிகள், அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகின்ற வகையில் ஈழத்தின் வீரப்பிள்ளை சிவந்தன் பாரிஸ் பட்டணத்தில் இருந்து கால்நடையாகப் புறப்பட்டு சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அவையை நோக்கி நடைப்பயணத்தைத் தொடங்கிவிட்டார்.
பகலில் நெருப்பெனக் கொதிக்கும் வெயிலிலும், இரவில் ஊசிமுனையாகத் தைக்கும் கொட்டும் பனியிலும் தன்னைத்தானே வருத்திக் கொண்டு நடக்கிறார்.சிவந்தனின் பயணம் வெற்றிகரமாக நடைபெறவும் பயணத்தின் குறிக்கோள் ஈடேறவும், அவரது உடல்நிலை பாதிக்காத வகையில் இயற்கைத் தாய் துணை புரிய வேண்டும். தியாகப் பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





Comments
Got something to say?
You must be logged in to post a comment.