பென்டகன் மீதான அல்கொய்தாவின் தாக்குதலே விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு காரணம்: கே.பி.
July 30, 2010
அமெரிக்காவின் பென்டகன் இரட்டைக் கோபுரம் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி அல்கொய்தா இயக்கத்தினால் தாக்கப்பட்டமையே தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு பிரதான காரணம் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளியுறவுத்துறை பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னர் அனைத்து மேற்கத்தேய நாடுகளும், அனைத்து நாடுகளினதும் போராட்டக்குழுக்களுக்கு எதிராக தமது முன்னெடுப்புகளை ஆரம்பித்ததுடன் போராட்டக்குழுக்கள் தொடர்பிலான கொள்கைகளையும் அவை மாற்றிக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழீழ விடுலைப்புலிகளுக்கான சர்வதேச உதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியாது போனதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் உலகின் எந்த ஒருநாட்டிலும், தனி நாட்டு கோரிக்கை சாத்தியப்படாத ஒன்றாக இருப்பதாகவும் அந்த கருத்துக்கான வரவேற்பும் குறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையுடன் தாம் தொடர்பில் இருந்ததாக தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் சரணடைவு தொடர்பில் இதன் போது பேசப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இது தொடர்பில் விரைந்து இயங்கவில்லை எனவும், நிலைமை மிகவும் பாரதூரமாக சென்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், வடமாகாண அபிவிருத்திகாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று அவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய குமரன் பத்மநாதன், அதற்கான நிதிகள் திரட்டப்பட்டு வருவதாகவும், வடமாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான நிதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கடந்த வருடம் மே மாதம் அறிவித்திருந்தது. அதனை முதலில் மறுதலித்த குமரன் பத்மநாதன் தலைவர் பத்திரமான இடத்தில் பாதுகாப்பாக இருப்பதாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். எனினும் சில நாட்களுக்கு பின்னர், அந்த கருத்தினை மாற்றி தலைவர் இறந்துவிட்டதாகவும், புதிய தலைவராக தாம் செயற்பட போவதாகவும் அறிக்கை விட்டிருந்தார்.
இந்த நிலையில் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு அரசாங்கத்தினால் தடுத்துவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. எனினும் அவர் சுதந்திரமாக நடமாடி வருவதாக எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றன.
இந்த நிலையில், குறித்த செவ்வியின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதி யுத்தத்தின் போதும், அமெரிக்காவின் பென்டகன் இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதல் தொடர்பிலும் புரிந்துகொள்ள தவறிவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.





Comments
Got something to say?
You must be logged in to post a comment.